search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    • பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.

    பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 டிகிரி கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும்.!ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது.!

    இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 டிகிரி கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.! அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது.!

    உங்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சினை சில சமயங்களில் இருக்கும்.. கணவன் வேலைக்குச் செல்ல தயாராகும் போது, 'என் பைக் சாவி எங்க.? சாக்ஸ் பாத்தியா.? ஷூவப் பாத்தியா.?'என்று மனைவியைப் போட்டு வதைப்பதும்..

    மனைவியும் "இது என்ன? கண்ணுக்கு முன்னே வச்சிக்கிட்டு தேடுறீங்க.? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்" என திட்டிக் கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி.! இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும். ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.!

    பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பெண்களால் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள்.! காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் மிக துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான்.

    ஆண்கள், பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்து கொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணர முடிவதில்லை.

    ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது, பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர்! சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்!

    இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான்.! மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். ஆனால் இந்தவிஷயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள்.! கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.!

    ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான இந்த வித்தியாசங்களை எல்லோரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.!

    -ஸ்ரீராம் கோவிந்த்

    • பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு தேடுவதும்.
    • உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து விடுகிறோம்.

    மனிதனின் வாழ்க்கைத் தேடலில் முக்கியமானது "உணவு".

    பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு தேடுவதும்

    அடுத்த வேளை பசிக்கு உணவை சேமிப்பதும்

    இந்த உணவுக்குத் தேவையான உழைப்பு மற்றும் பொருள் ஈட்டல்..

    இவையே முக்கியமான முதல் விசயங்கள்.

    பசி உணர்வைத் தூண்டும் க்ரெலின் எனும் ஹார்மோன் நமது ஜீரண மண்டலத்தில் சுரக்கப்பட்டு நாம் உணவு சாப்பிடத் துவங்குகிறோம்..

    வயிறு நிரம்பியதும் லெப்டின் எனும் ஹார்மோன் சுரந்து நாம் திருப்தியை அடைகிறோம். உணவு சாப்பிடுவதை நிறுத்தி விட்டு எழுந்து விடுகிறோம். இந்த சுழற்சி தொடர்ந்து மாறி மாறி நடந்து வருகிறது.

    இதற்கிடையே ஒருவர் ஏன் குண்டாகிறார்?

    ஏன் அவருக்கு உடல் பருமன் ஏற்படுகிறது?

    தனது தேவைக்கு அதிகமாக கார்போஹைட்ரேடஸ் எனும் மாவுச்சத்து உணவுகளை உண்பதால் இன்சுலின் எனும் ஹார்மோன் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    இதனால் "ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு" போல ரத்தத்தில் தேவைக்கும் மிகுதியான இன்சுலின் பிரவாகமெடுத்து ஓடுகிறது.

    இதனால் இன்சுலின் எதிர்ப்புநிலை (இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்) உருவாகிறது.

    இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உணவு சாப்பிட்டபின் வேலை செய்ய வேண்டிய லெப்டின் அனுப்பும் திருப்திக்கான சமிக்ஞைகள் சரியாக மூளையைச் சென்று அடையாது. எனவே உணவு சாப்பிட்ட பிறகு திருப்தி ஏற்படாமல் போகும்.

    தொடர்ந்து க்ரெலின் ஆதிக்கம் செலுத்தும். அதை மட்டுப்படுத்தும் லெப்டின் சரியாக வேலை செய்யாது.

    எனவே உடல் பருமனாக இருப்பவர்கள் இன்னும் மேலதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் அதிகமாக உடல் எடை கூடுவார்கள். இதுவும் ஒரு சங்கிலி சுழற்ச்சியாகத் தொடர்ந்து 80 கிலோ இருந்த நபரை 120-140 கிலோவாக்கி விடும்.

    சரி.. இந்த சுழற்சியில் இருந்து ஒருவர் எவ்வாறு விடுபடுவது?

    இதற்கு நாம் உணவுகள் மற்றும் அவற்றில் உள்ள சத்துகள் எவ்வாறு நமக்கு திருப்தியை வழங்குகின்றன என்று புரிந்து கொள்வது நல்லது.

    உணவு சாப்பிட்ட பிறகு உடனடியாக திருப்தியை வழங்குவது ஒரு பக்கம் என்றால், உணவு சாப்பிட்டு நீண்ட நேரம் கழித்தும் திருப்தியுடன் வைத்திருப்பது மற்றொரு பக்கம்.

    நாம் உண்ணும் உணவுகளில்

    மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்ஸ்)

    கொழுப்புச் சத்து (ஃபேட்)

    புரதச்சத்து (ப்ரோட்டீன்)

    நார்ச்சத்து (ஃபைபர்)

    ஆகியவை உள்ளன.

    மாவுச்சத்து அடங்கிய தானியங்கள் சார்ந்த உணவு முறை / இனிப்பு சுவை கொண்ட சீனி / சர்க்கரை கலந்த பானங்கள் முதலியவை சாப்பிட்டவுடன் கொஞ்சம் திருப்தியைத் தந்தாலும், சாப்பிட்ட சில மணிநேரங்களில் மீண்டும் அதிகப் பசியைத் தூண்டும்.

    நல்ல கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட உடனே திருப்தியை குறைவாக வழங்கினாலும் நீண்ட நேர திருப்தியை வழங்கவல்லவை.

    நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட உடனே வயிற்றை நிரப்பி திருப்தியை வழங்கினாலும் நீண்ட நேர திருப்தி வழங்குவதில் குறைபாடு கொண்டவை.

    புரதச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட்ட பிறகு உடனடி மற்றும் நீண்ட நேர திருப்தியை சிறப்பாக வழங்குகிறது.

    நீங்கள் உணவு மூலம் உடனடி மற்றும் நீண்ட நேர திருப்தி அடைய விரும்பினால் உங்களது மூன்று வேளை உணவிலும் மாவுச்சத்தைக் வெகுவாக குறைத்து, புரதச்சத்து உள்ள உணவுகளையும் நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்து வந்தால்..

    அடிக்கடி டீ/காபி, வடை பஜ்ஜி, பர்கர் / கூல்ட்ரிங்க்ஸ் என மனம் கரைகடல் போல அலைபாயாமல் ஆழ்கடல் போல அமைதியாக இருக்கும். உடல் எடையும் குறையத் துவங்கும்.

    -டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    • சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும்.
    • எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும்.

    "மேல் நாட்டிலே கூட இந்தியாவை ஏழை நாடு, ஏழை நாடு என்று கூறுவதுண்டு. உண்மையிலேயே இந்த நாடு ஏழைநாடு அல்ல. இந்த நாட்டிலே என்ன குறைவு? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கின்றேன். இயற்கை வளத்திலே குறைவா, மக்களுடைய அறிவிலே குறைவா அல்லது ஞானத்திலே தான் இந்நாடு குறைந்து விட்டதா? எவ்விதக் குறைபாடும் இல்லை.

    இன்று இந்திய நாட்டிலே படித்துப் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றார்கள். பல நாடுகளை இவர்கள் வளப்படுத்துகின்றார்கள். இத்தகைய முறையிலே இன்று இந்திய நாடு எல்லா நாடுகளுக்கும் விஞ்ஞானிகளை ஏற்றமதி செய்து கொண்டு இருக்கின்றது என்றால் இது தவறல்ல. நான் நேரடியாகச் சென்றுப் பார்த்ததைதான் கூறுகின்றேன்.

    இந்த முறையிலே இந்நாட்டிலே விஞ்ஞான அறிவானது அந்த அளவிற்குத் ததும்பி இருப்பதைக் காண்கின்றோம். இவ்வாறு இருந்தும் என்ன குறைபாடு என்று கூறினால் அரசியல் முறையிலே இருக்கக்கூடிய ஊழல்கள் தான் இதற்குக் காரணம்.

    ஒழுங்கான அரசியலை நம்மால் அமைத்துக் கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் அந்நிய நாட்டு ஆட்சியிலே பட்ட பண்பாடானது அப்படியே தொக்கி நிற்கின்றது. இன்னும் நமக்கேற்ற முறையிலே நாம் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவில்லை.

    வாழ்க்கையை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் வாழ்வாங்கு வாழ வேண்டுமானால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவு வேண்டும். அவை:

    1] அறிவு

    2] சுகாதாரம்

    3] பொருளாதாரம்

    4] அரசியல்

    5] விஞ்ஞானம்

    ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்.

    வாழ்க்கைக்கு இந்த ஐந்தும் தேவை. ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்திலேயும் நிறைவு பெற வேண்டும். சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு வாழ்க்கையிலே புகுந்தால் தன்னிறைவாக இருக்கும். யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும்."

    - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

    • அபிராமிபட்டர் பிணிக்கு மருந்தே என, நம் பிறவிப்பிணித் தீர, நம் கண்மணியிலுள்ள ஒளிதான் மருந்து என்கிறார்.
    • ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்றுதான் ! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றைத்தான் சொன்னார்கள் ! நன்றைத் தான் சொன்னார்கள்.

    இந்த ஒரு பாடல் போதும் ஞானம் பெறுவதற்கு!

    "மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த

    அணியே அணியும் அணிக் கழகே அணுகாதவர்க்கு

    பிணியே பிணிக்குமருந்தே அமரர் பெருவிருந்தே

    பணியே னொருவரைநின் பத்மபாதம் பணிந்தபின்னே"

    அபிராமிபட்டர் அடியேனுக்கு உரைத்த அபிராமி அந்தாதி பாடல் இது !

    மணியே என்பதற்கு இதுவரை உரை எழுதிய யாரும் சரியாக சொல்லவில்லை! மணியே என்றால் மாணிக்கமே என்றே பொருள் சொல்லியிருக்கின்றனர்.. அப்படியல்ல !

    மணியே - கண்மணியே..

    மணியின் ஒளியே - கண்மணியிலுள்ள ஒளியே..

    ஒளிரும் மணிபுனைந்த அணியே - ஒளிபொருந்திய மணியை உடைய கண்ணே..

    அணியும் அணிக்கழகே - கண்ணுக்கு அழகே, அதிலுள்ள மணியின் ஒளியே..

    அணுகாதவர்க்கு பிணியே -கண்மணி ஒளியை அணுகாதவர்களுக்கு பிறவிப் பிணியே..

    பிணிக்கு மருந்தே - பிறவியாகிய பிணிதீர மருந்து கண்மணி ஒளியே..

    அமரர் பெரு விருந்தே - தேவர்களுக்கும் பெரிய விருந்தே இதுதான்..

    பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே - கண்மணி ஒளியே இறைவனின் தாமரை திருவடி என்பது, அதை பணிந்த நான் வேறொருவரை பணியேன் என்பதே இதன் பொருள்.

    இதுவே ஞானப்பொருள். இந்த ஒரு பாடல்போதும் ஞானம் பெறுவதற்கு!

    அபிராமிபட்டர் பிணிக்கு மருந்தே என, நம் பிறவிப்பிணித் தீர, நம் கண்மணியிலுள்ள ஒளிதான் மருந்து என்கிறார்.

    இதையேதான் வள்ளலாரும்,

    'நல்ல மருந்து இம்மருந்து

    சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து

    அருள்வடிவான மருந்து

    அருட்பெருஞ்ஜோதி மருந்து' என்கிறார்.

    "கண்ணின் மணியை கருத்தின் தெளிவை

    விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை

    எண்ணி எண்ணி இரவும் பகலுமே

    நண்ணுகின்றவர் நாந்தொழுந் தெய்வமே"

    என்று தாயுமானசுவாமிகள் ஞானம் உரைக்கிறார் !

    இறைவன், கண்ணின் மணியில் ஒளியாக இருப்பதை, எல்லாம் வல்ல இறைவனே விண்ணில் இருக்கும் மெய்யானவரே அது என்பதை, கருத்தில் இருத்தி இரவு பகலாக எப்போதும் எண்ணி எண்ணி தவம் செய்பவரே நான் கும்பிடும் கடவுள் என உரைக்கிறார் தாயுமான சுவாமிகள்.

    இதுதான் உன்னதமான ஒப்பற்ற ஞானவழி !

    ஞானிகள் எல்லோர் கூற்றும் ஒன்றுதான் ! நாம் ஞானம் பெற எல்லோரும் ஒன்றைத்தான் சொன்னார்கள் ! நன்றைத் தான் சொன்னார்கள்!

    இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

    - ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

    • நவீன அறிவியல் கூட்டத்தின் கண்களுக்கு புலப்படாத, நிழல் கோள்களாக "ராகு கேது" நவகிரகங்களில் உள்ளன.
    • சூரியன் மையம் தான் என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு நிறுவியவர்கள் தமிழர்களே.

    நமக்கெல்லாம் தெரிந்த அளவில், கிரகம் என்றால் "வாழ்விடம்"அல்லது "வீடு" என்று பொருள். அதன் உண்மையான பொருள் "வேறு வீடு" என்பதே சரியானதாகும்.

    நாம் தங்கியிருக்கும் வீட்டை விட்டு, வேறு வீட்டிற்கு குடிபோவதை "கிரகப்பிரவேசம்" என்று அழைக்கிறோம். அதாவது வேறு வீட்டிற்கு மாறுகிறோம் என்பதை குறித்த பெயர்தான் "கிரகப்பிரவேசம்".

    எனவே கிரகம் என்றால் வேறு இடம், அதாவது மனிதர்கள் வாழும் பூமி அல்லாத "வேறு அகம்" என்பதே மருவி, வேறகம், கேரகம் பிறகு கிரகம் என்றானது.

    இதிலிருந்து என்ன தெரிகிறது. கிரகம் என்பது சூரியனை சுற்றும் கோள்களை மட்டும் குறிக்காது, அது பூமியல்லாத, ஆனால் பூமியில் வாழும் உயிரினங்களின் மீது கனிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் வேறு அகங்களை குறிக்கிறது. இதில் துணைகோளான நிலவு, வீண்மீனான சூரியன் , ஆகியவையும் அடங்கும்.

    சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு (வியாழன்), சுக்ரன் (வெள்ளி), சனி, ராகு (நிழல்கோள்), கேது ( நிழல்கோள்) ஆகிய ஒன்பதும் வேறு அகங்கள் ஆகும்.

    மேற்கண்ட 9 வேறகத்தில் சூரியனை மட்டும் நடுவே நிறுத்தி, சூரியன் மையம் தான் என்ற அறிவியல் உண்மையை உலகிற்கு நிறுவியவர்கள் தமிழர்களே.

    மேலும் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே, நேர்கோட்டில் நிலவு வந்து மறைக்கும் "சூரிய கிரகணத்தை" பாம்பின் உடல் , மனித தலை கொண்ட "ராகு" எனும் நிழல் கிரகமாகவும்,

    சூரியனுக்கும் நிலவிற்கும் நடுவே நேர்கோட்டில் பூமி வந்து மறைக்கும் "சந்திர கிரகணத்தை" பாம்பின் தலை, மனித உடல் எனும் "கேது" கிரகமாகவும் உருவகம் செய்தனர்.

    ஏனென்றால் மற்ற பௌதீக கிரகங்களை போலவே , பூமியில் வாழும் உயிரினங்களின் மீது குறிப்பிட்ட தாக்கத்தை, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுத்துகிறது. இதனால்தான் நவீன அறிவியல் கூட்டத்தின் கண்களுக்கு புலப்படாத, நிழல் கோள்களாக "ராகு கேது" நவகிரகங்களில் உள்ளன.

    -முனைவர் பாண்டியன்

    • பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம்.
    • ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

    சிவன் சொத்து குலநாசம் என்று கூறுவார்கள். இதற்கு பொதுவான விளக்கம் சிவன் கோவில் சொத்தை அபகரித்தால் குலம் நாசம் என்பதாகும்.

    இந்து சமயத்தில் பெருமாள், சிவன், என இரு பெரும்தெய்வங்கள் உண்டு. இதில் பெருமாள் பார்ப்பதற்கு பொன்பொருள், ஆடை ஆபரணங்கள், நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.

    ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தரித்து உடலில் சுடுகாட்டுச்சாம்பல் பூசிக்கொண்டு கையில் திருவோடு ஏந்தி பார்ப்பதற்கு பரதேசிக்கோலத்தில் இருப்பார்.

    பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர் மீது பக்திகொண்டு மக்கள்வழிபட்டு அவரிடம் கோரிக்கை வைப்பது இயல்பான விசயம்.

    ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவதுதான் நிதர்சனம். அவருடைய அலங்காரம் அப்படி.

    பெருமாளையார் வேண்டுமானாலும் வணங்கலாம். ஆனால் ஈசனை வணங்க ஈசனே தேர்தெடுத்தால் மட்டுமே அவர் மீது பக்தி கொள்ளமுடியும்.

    சிவன் சொத்து எனப்படுவது திருநீறும் ருத்ராட்சமுமே. இதை அணிந்தால் அவரது குலம் நாசமாகும். அதாவது அவரது பாவங்கள் அனைத்தும் நாசமாகும். இதனால் அவரது மறுபிறப்பும் நாசமாகும். அவரால் அவரது வம்சமே பிறவிக்கடலில் இருந்து மீண்டு....பிறவாநிலையை அடைவர். இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் பொருளாகும்.

    -ஆர்.எஸ். மனோகரன்

    கி. வா. ஜ. ஒருமுறை தொடர்ச்சியாக விழாக்களில் கலந்து கொண்டதால் இருமல் மற்றும் தொண்டை புண்ணால் அவதிப்பட்டார். அதற்காக விழாக்குழுவினர் அவருக்கு coughsyrup ஒன்றை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.

    கி.வா.ஜ. அவர்கள், 'இதைத்தானா கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் "சிறப்பு" என்கிறார்கள்' என்று கேட்டார்.

    பல்லாண்டுகளுக்கு முன் சென்னை வீனஸ் காலனியில் நடந்த வாரியாரின் புராணச் சொற்பொழிவின் இடையே ஒரு நாள் வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தினர் வெளியிட்டனர். பாராட்டுரை சொல்ல வந்த கி.வா.ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, 'நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்' என்றார். அரங்கத்தில் கைதட்டல் எழுந்தது.

    அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி.வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, 'நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்' என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

    ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. "மாதுளங்கனி அருமை!" என்று பாராட்டினார்.

    "மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!" என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க, "மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!" என்றார் கி.வா.ஜ.

    கிவாஜ சிலேடையில் உச்சமான ஒன்று! அவரை அதே போல மடக்கிய ஒரு பெண் உண்டு தெரியுமா? ஒரு பெண் அவரை தங்கள் கூட்டத்தில் பேச அழைத்தாள்.

    கிவாஜ , இன்னிக்கு வேணாமே! தொண்டை கம்மியிருக்கு... என்றார். அந்தப் பெண் சொன்னாள், 'பரவாயில்லை, கம்மல் பிரகாசிக்கவே செய்யும்.'

    • ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறது.
    • ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.

    எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அதுபோல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்!

    ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காத்தோட கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள்ளேயும் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். அனைவரும் ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது.

    மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை, மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

    இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்! இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

    இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்! குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம். நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது! உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்!

    இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

    கோவிலுக்கு போய்ட்டு வந்தா குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோவில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீணாக்கக் கூடாது என்பதால்தான்!

    -இந்திரா சவுந்திரராஜன்

    • வானம் என்று நாம் சொல்வது, மேலே கிடையாது.
    • பூமியின் இடுப்பில் கட்டிய ஒட்டியாணம்போலப் பரந்திருக்கிறது.

    அறிவியலின்படி, வானம் (ஆகாயம்) என்று எதுவும் இல்லை. பகலில் பார்க்கும் வானம் வேறு. இரவில் பார்க்கும் வானம் வேறு. பகல் வானம் என்பது வெறும் சிலநூறு கிலோமீட்டர்கள் தூரத்தில் (உயரத்தில் அல்ல) இருப்பது. ஆனால் இரவு வானம், பல பில்லியன் ஒளியாண்டுகள் தூரமுள்ளது. இரண்டிற்கும் அணுக்கருவுக்கும், அல்ப்ஸ் மலைக்குமுள்ள தூர வித்தியாசம் உண்டு.

    நீங்கள் நினைக்கும் வானத்தில், சந்திரனோ, சூரியனோ, நட்சத்திரங்களோ கிடையாது. அவை இருப்பது ஒரு பாய்வெளியில் (சரியாய்த்தான் படிக்கிறீர்கள்). அதை வானம் என்று சொல்ல முடியாது. விண்வெளியென்று சொல்லலாம். விண்ணும், வானும் தமிழில் ஒன்றா என்று முதலில் பார்க்க வேண்டும். ஒன்று என்றால், Space க்கு ஒரு புதுச்சொல்லைத் தமிழில் கண்டுபிடிக்க வேண்டும்.

    எனவே, 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்'. 'ஆகாயமே எல்லை'. 'விண்ணைத் தாண்டி வருவாயா?' என்பதெல்லாம் கறிக்குதவாது. பேச்சுக்குக்கூட வான எல்லையைத் தொடமுடியாது.

    கடைசியாக ஒன்று. வானம் என்று நாம் சொல்வது, மேலே கிடையாது. அது பூமியின் பக்கவாட்டில் இருக்கிறது. பூமியின் இடுப்பில் கட்டிய ஒட்டியாணம்போலப் பரந்திருக்கிறது.

    -அருண் நாகலிங்கம்

    • யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள்.
    • இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள்.

    2.3,4,5,6,7,8,9 என்று எல்லா எண்களும் கோணல் மாணலாக இருக்கின்றன. ஆனால் பூஜ்ஜியத்தை எடுத்துப் பாருங்கள். ' 0 ' அது எங்கே தொடங்குகிறதோ, அங்கே போய்த் தான் முடிகிறது.

    பூஜ்யம் தான் முழுமையான எண், மற்ற எண்களுக்கு மதிப்பு வைத்திருக்கிறோம். பூஜ்யத்திற்கு மதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறோம்.

    ஆனால், அதுவா ஒன்றுமில்லை? 1 என்ற எண்ணிணை எடுத்துக் கொள்ளுங்கள். பூஜ்ஜியத்திற்குப் பின்னால் இந்த 1ஐ வையுங்கள். இப்போது அதன் மதிப்பு 10.

    பூஜ்ஜியமோ ஒன்றுமில்லை. ஒன்றுமிலாததை மதித்து அதற்குப் பின்னால் 1ஐ வைத்தால், அதன் மதிப்பு பத்தாகிவிட்டது.

    பூஜ்யத்திற்கு ஒன்றுமே இல்லாத போதும் பூஜ்யத்தை அலட்சியப்படுத்தி 1ஐ முன்னாள் போட்டால் 1 இன் மதிப்பு பத்தில் ஒன்று [0.1].

    அது போன்று இறைவன் நிறைவானவன். தனக்கென்று தனி மதிப்பு இல்லாதவன். யார் அவனைச் சேர்ந்தார்களோ, அவர்களுடைய மதிப்பை உயர்த்தக் கூடியவன்.

    யார் அவனை அலட்சியம் செய்து ஒதுங்கி இருக்கிறார்களோ, அவர்கள் பத்தில் ஒன்றாக ஆகி விடுவார்கள்.

    இறைநிலையை மதிப்பவர்கள் அந்த இறைநிலை அளவுக்கு உயர்வார்கள். இறைநிலையை உணர்ந்து அதை மதிப்பவர்களைப் பூஜ்யர் என்பார்கள்.

    -வேதாத்திரி மகரிஷி

    • தமிழ் புலவர்கள் வீடுகளில் கிடைக்கும்.
    • சிலப்பதிகாரத்தின் சுவையில் மயங்கிய அந்தப் புலவர் தொடர்ந்து அலைந்து திரிந்து நிறைய நூல்களை உரையுடன் பதிப்பித்தார்.

    கும்பகோணம் உயர்நிலைபள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணிபுரிந்து வந்த புலவர் ஒருவரை கும்பகோணம் நகர முன்சீஃப் சேலம் இராமசாமி முதலியார் காண விரும்புவதாக தகவல் வரவே, புலவர் தயங்கியவாறே அவரைக்காணச் சென்றார்.

    "வாரும்! நீர் தமிழில் ஆர்வம் மிக்கவர் என்று கேள்விபட்டுள்ளேன். என்னென்ன படித்துள்ளீர்?" என்றார் முன்சீஃப்.

    "குறவஞ்சி, காவடி சிந்து, உலா கலம்பகம், பிள்ளைத்தமிழ், அம்மானை, அந்தாதி.."

    "அதில்லை ஐயா! இன்னும் முற்காலத்தியது "

    "வில்லிபாரதம், நளவெண்பா, கம்ப இராமாயணம், பெரிய புராணம்.."

    "இல்லை ஐயா.. அதற்கும் முந்தைய காலம்.."

    "நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம்.."

    "அதற்கும் முந்தைய காலத்தியது ?"

    "அதற்கூ..ம் முந்தையதா ? "புலவருக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. தான் இவ்வளவு கற்றபிறகும் இன்னும் என்ன இருக்கிறது என்று யோசிக்கிறார்.

    "இதுதானையா தமிழ் இலக்கியம்.. இதைப்படித்துப் பாரும்.. எவ்வளவு அற்புதமான இலக்கியம்!" என்று ஒரு ஓலைச்சுவடிக்கட்டை எடுத்து தருகிறார்.

    "இதன் பெயர் சிலப்பதிகாரம்! நிறைய பகுதிகள் விடுபட்டு போயுள்ளன. "

    "அறிவேன் ஐயா! சில பாடல்களை படித்துள்ளேன். முழுமையாக எங்கும் கிடைக்கவில்லையே! "

    "அதற்குதான் உம்மை வருமாறு அழைப்பு விடுத்தேன். சுவடிகள் கிடைக்காமல் எங்கு போய்விடும்? இன்னும் மணிமேகலை என்றும் ஒரு காப்பியம் இருக்கிறது. சைவ மடங்கள், தமிழ் புலவர்கள் வீடுகளில் கிடைக்கும் ஐயா! நீர் இதைத் தேடி பாடபேதம் நீக்கி முழுமையாக பதிப்பிக்க வேண்டும். நீர் சென்னையில் என்னுடைய இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம். உம்முடைய செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்தப் பணியை நீர் செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்" என்றார்.

    சிலப்பதிகாரத்தின் சுவையில் மயங்கிய அந்தப் புலவர் தொடர்ந்து அலைந்து திரிந்து நிறைய நூல்களை உரையுடன் பதிப்பித்தார்.

    அவர் உரையோடு பிழை திருத்தி பதிப்பித்த நூல்கள்..

    சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம், 12 புராணங்கள், பெருங்கதை, 9 உலா நூல்கள், 6 தூது நூல்கள், 3 வெண்பா நூல்கள், 4 அந்தாதி நூல்கள், 2 பரணி நூல்கள், 2 மும்மணிக்கோவை நூல்கள், 2 இரட்டைமணிமாலை நூல்கள், அங்கயற்கண்ணி மாலை, இதர சிற்றிலக்கியங்கள் 4. அந்த புலவர்தான் உவே.சா எனப்படும் உ.வே. சாமிநாதைய்யர். அவரோடு சி.வை.தாமோதரம் பிள்ளை, திருக்குறளை பதிப்பித்த அயோத்திதாச பண்டிதரின் தாத்தா கந்தன் பண்டிதர் ஆகியோர் தமிழுலகம் மறக்கக்கூடாத மாமனிதர்கள்.

    -எம்.எஸ். ராஜகோபால்

    • ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுப்பதோ அல்லது மருமகளாக ஏற்பதோ கூடாது.
    • ஒருவர் வாழ்வு தாழ்ந்தும், மற்றொருவர் வாழ்வு உயர்ந்தும் இருக்கும்.

    ஒரே குடும்பத்தில் இரு பெண்களை திருமணம் செய்யலாமா..?

    இந்து சமய சாஸ்திரத்திரன் படி ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொடுப்பதோ அல்லது மருமகளாக ஏற்பதோ கூடாது.

    ஒரு குடும்பத்திற்கு ஒரு பெண்ணை மணம் முடித்து கொடுத்தவுடன் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுப்பது நல்லது கிடையாது. அப்படி இரு பெண்களையும் திருமணம் செய்தால் ஒருவர் வாழ்வு தாழ்ந்தும், மற்றொருவர் வாழ்வு உயர்ந்தும் இருக்கும். மேலும் அவர்களின் வாழ்க்கை சரியாக இருக்காது என சாஸ்திரம் கூறுகிறது.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்து அந்த பெண் வேறேதும் தவறான காரணத்தால் கணவனோடு வாழாமல் போனால் அதற்கு பரிகாரமாக இன்னொரு பெண்ணை திருமண செய்து கொடுக்கலாம்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    ×