என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே வேகத்தடையை கடந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பெண் பலி
- மகனுடன் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு
- வேகத்தடுப்புகளில் வர்ணம் பூசி ரிப்ளைக்டர் லைட் அமைக்க வாகனஓட்டிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராமேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (61). இவரது மனைவி சீதாமணி (52). இவர்களது மகன் சரண் (26).
இவர் தனது மோட்டார்சைக்கிளில் நேற்று தாயார் சீதாமணியுடன் வெள்ளியங்காடுக்கு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மோட்டார்சைக்கிள் கணுவாய்ப்பாளையம் அருகே உள்ள விநாயகா வித்யாலயா பள்ளியின் அருகே வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடை முன்பு தெரியாமல் ஏறி இறங்கும்போது மோட்டார்சைக்கிளில் இருந்து சீதாமணி தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சீதாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சீதாமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்பள்ளியின் முன்பு உள்ள சாலையில் ஏற்படுத்தி உள்ள வேகத்தடையில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் வேகத்தடை இருப்பதற்கான ரிப்ளக்டர் லைட் மற்றும் வெள்ளை கோடுகளில் வர்ணம் பூசாமல் வைத்திருந்துள்ளனர். இதனால் இந்த வேகத்தடை களை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது கட்டுப்பாட்டை மீறி ஏறி இறங்கி கீழே விழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
எனவே சாலைப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்படுத்தியுள்ள வேகத்தடுப்புகளில் வர்ணம் பூசி ரிப்ளைக்டர் லைட் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






