search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுந்தராபுரம் அய்யர் ஆஸ்பத்திரி சந்திப்பில் சிக்னல் அமையுமா?
    X

    சுந்தராபுரம் அய்யர் ஆஸ்பத்திரி சந்திப்பில் சிக்னல் அமையுமா?

    • வாகனங்கள் குறுக்கு, மறுக்குமாக செல்லும்.
    • கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் பகுதியில் அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் உள்ளது.

    இந்த இடத்தின் வலது புறமும், இடது புறமும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. குறிப்பாக இடதுபுறத்தில் முருகா நகர், முத்தையா நகர், லோகநாத நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளது.

    வலது புறத்தில் செங்கப்ப கோனார் லே-அவுட், ஆறுமுக கவுண்டர் வீதி, மாச்சம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. மேலே குறிப்பிட்ட பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதனால் 24 மணி நேரமும் இப்பகுதியில் வாகனங்கள் குறுக்கு, மறுக்குமாக செல்லும்.

    மேலும் இந்த அய்யர் ஆஸ்பத்திரி பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளதால் அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்லும். இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பள்ளி, கல்லூரி வாகனங்களும் அதிகமாக இப்பகுதியில் ஆக்கிரமித்து வருவதை காண முடியும்.

    இங்கு சிக்னல் இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள் அவ்வப்போது விழுந்து எழும் நிலையும் காணப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகே சிக்னல் அமைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் போக்குவரத்து போலீசார் தினம் அப்பகுதியில் நின்று கொண்டு வாகனங்களை சீர்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனம் கொண்டு செயல்பட்டால் சுந்தரபுரம் அய்யர் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து சீராவதுடன் விபத்துகளும் தவிர்க்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×