search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    • காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது இளைய மகன் பாலமுருகன் (வயது 22). ஐ.டி.ஐ. படித்து விட்டு சிவகாசியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சிவகாசி நாரணாபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    தாங்கள் காதலிப்பது குறித்து அவர்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இளம்பெண்ணின் தந்தை மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் சிவகாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அப்போது பெண்ணின் பெற்றோர் தங்களது மகளிடம் பேச விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் பெண்ணிடம் தனியாக பேசினர். இதையடுத்து அந்த பெண் பாலமுருகனிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் நிலையத்திற்கு மனைவியுடன் சென்ற பாலமுருகன் தனியாக கிராமத்திற்கு வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று இரவு அங்குள்ள கன்னி மாரியம்மன் கோவில் சாமி சிலைக்கு முன்பாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாலமுருகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம் செய்து 12 நாட்களில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×