search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சாவு
    X

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி சாவு

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு தொழிலாளி இறந்தார்.
    • இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பட்டாசு தயாரிக்கும் பணியில் திருத்தங்கல் மேலமாட வீதியை சேர்ந்த ரவி(வயது58), சாமுவேல் ஜெயராஜ் உள்பட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் ஆலையில் உள்ள தனி அறையில் பட்டாசு தயாரிப்பதற்காக மருந்துகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது மருந்துகளுக்குள் உராய்வு ஏற்பட்டதால் திடீரென தீப்பிடித்தது.

    இதில் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்தன. இதன் காரணமாக கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது. இதில் சிக்கிய ரவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் சாமுவேல் ஜெயராஜூம் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சாமுவேல் ஜெயராஜை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருந்த போதிலும் சிகிச்சை பலனிளிக்காமல் சாமுவேல் ஜெயராஜ் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் சிக்கிய ரவி ஏற்கனவே பலியான நிலையில் தற்போது சாமுவேல் ஜெயராஜூம் பலியாகிவிட்டார். இதனால் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×