search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் இன்று 291 மையங்களில் 96,207 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
    X

    சேலம் மாவட்டத்தில் இன்று 291 மையங்களில் 96,207 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்

    • தேர்வுகளை எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வந்தனர்.
    • தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு இன்று நடந்தது. தேர்வுக்காக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களுக்குட்பட்ட 291 தேர்வு மையங்களில் 394 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் 96,207 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வுகளை எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வந்தனர். முதலில் தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்பட்டன. அதற்கு முன் வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எழுதுபவர் உதவியுடன் தேர்வு எழுதுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

    தமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வினை கண்காணிப்பதற்காக 394 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள், 24 பறக்கும் படைகளும், 96 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டது. மேலும் இதனை கண்காணித்திடவும், தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    Next Story
    ×