search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24 மணி நேரம் கடைகள் திறக்க அனுமதி  திருப்பூர் தொழிலாளர்கள் மகிழ்ச்சி
    X

    கோப்புபடம்

    24 மணி நேரம் கடைகள் திறக்க அனுமதி திருப்பூர் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

    • சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும்.
    • பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாநகரம் சர்வதேச பின்னலாடை சந்தைகளில், அசைக்க முடியாத முக்கிய இடத்தில் இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர் மாவட்டத்தில் 21 மாநிலங்களை சேர்ந்த 2.20 லட்சம் பேர் தொழில் நிமித்தமாக வசிப்பது, கொரோனா கால கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டது.

    தமிழகத்தின் 39 மாவட்டத்தை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர்.தமிழகத்தின் தூங்கா நகரமாக இருப்பது மதுரை. தென்மாவட்டங்களை மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய இடமாக இருப்பது மதுரை. பின்னலாடை ஏற்றுமதி வர்த்த்கமும், உள்நாட்டு பனியன் உற்பத்தியும் வேகமாக வளர்ச்சி பெற்ற போது திருப்பூர் நகரமும், தூங்கா நகரமாக மாறிக்கொண்டிருந்தது. ஊரடங்கு வந்த பிறகு, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

    சட்டம், ஒழுங்கு பிரச்சினைக்காக அனைத்து வகை கடைகளும், இரவு 11 மணிக்கு மேல் மூடப்பட வேண்டும் என்பது போலீசாரின் உத்தரவு. அப்படியிருந்தும் 12 மணி வரை சில கடைகள் மறைமுகமாக இயங்கின. அதிகாலை, 4 மணிக்கு ஓட்டல், பேக்கரிகள் திறக்கப்படுகின்றன. இடையே நான்கு மணி நேரம் மட்டுமே மூடப்படுகிறது.திருப்பூரில் வசிக்கும் வெளி மாவட்ட தொழிலாளர், தற்காலிகமாக வாடகை அறையில் தங்கி, ஓட்டலில் சாப்பிடுகின்றனர்.

    பனியன் நிறுவனங்களில் 12 மணி வரை உற்பத்தி தொடர்ந்தால் அதுவரை பேக்கரி - டீ கடைகளின் தேவையும் இருக்கிறது. கடைகள் 11 மணிக்கு மூடப்படுவதால் பல வகையில் வெளிமாநில தொழிலாளர் பாதிக்கப்பட்டனர்.தமிழக அரசு மீண்டும் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என அனுமதி அளித்துள்ளது. தொழிலாளர் சமூக பாதுகாப்பு குறித்து தொழிலாளர் துறையும் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு, தொழிலாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    பணி முடிந்துதாமதமாக வெளியேறும் தொழிலாளர், உணவு, சிற்றுண்டி கிடைக்காமல் அவதிப்பட்டனர். அனைத்து கடைகளும்24 மணி நேரமும் திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டாலும், ஓட்டல், சிற்றுண்டி விற்கும் தள்ளுவண்டிகள், நடமாடும் டீக்கடைகள், பேக்கரிகள் மட்டுமே அதிக அளவு திறந்திருக்க வாய்ப்புள்ளது.

    தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். பர்னிச்சர் கடைகளும் பரபரப்பாக காணப்படும். பூ மார்க்கெட், பழக்கடைகளும், பழமுதிர்நிலையங்களும் மூடப்படும் வரை கூட்டமாக இருக்கும். இனி இரவு முழுவதும் கடை இயங்கலாம் என்பதால், பண்டிகைகால நெருக்கடிகள் குறைய வாய்ப்புள்ளது.

    Next Story
    ×