search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம்
    X

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த போது எடுத்த படம். (உள்படம்-சோமாஸ்கந்தர்).

    திருப்பூர் வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம்

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
    • தினமும் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து பூத வாகனம், அன்ன வாகன காட்சி, கயிலாய வாகனம், கற்பக விருட்ச வாகனம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோவிலில் தினமும் நடைபெற்று வந்தது. மேலும் தினமும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் காட்சியளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பெருமாள் கோவில் அருகே தேர்நிலையில் இருந்து புறப்பட்ட தேர் அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இன்று (திங்கட்கிழமை) மாலை வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) பரிவேட்டை, 15-ந் தேதி தெப்பத்திருவிழா, 16-ந் தேதி மகாதரிசனம் ஸ்ரீ நடராஜர்-சிவகாமியம்மன் திருவீதி உலா, 17-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு, 18-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×