search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழ்பவானி வாய்க்கால் கரையில்  மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு   மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் - அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌
    X

    கோப்புபடம். 

    கீழ்பவானி வாய்க்கால் கரையில் மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் - அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌

    • இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும்.
    • மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

    காங்கயம்:

    கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌ எழுதியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் இலட்சக்கணக்கான 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் இருப்பது அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கூட அம்மரங்களைக் கண்டு ரசித்ததாக கோவையிலே விவசாயிகளிடம் பேசும் போது நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இந்த மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வெட்டுவதற்கு உறுதியாக அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சூழலியலாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய ஆபத்து மனித குலத்திற்கு இன்று அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்திய நாட்டிலேயே தி.மு.க.வின் 18 வது அணியாக கழக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    அதேபோல 2021ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும். அதுபோக தமிழ்நாட்டின் பரப்பிலே 33 சதவிகிதம் வனப்பரப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற ஐக்கிய நாட்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் அயராது பாடுபட்டு வருகின்றார். இச்சூழலிலே வளர்ந்த 60 மற்றும் 70 வருடங்களாக இருக்கக்கூடிய மிகப் பெரிய மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும். பல்லுயிர் தன்மை அழியும்.

    ஆதலால் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை ஈரோடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன் வைத்தால் அதனை அமைச்சர் நிராகரித்து, இங்கே இருக்கக்கூடிய மரங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி விவசாயிகளின் சார்பாகவும் பல லட்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×