search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயில்ரங்கம் அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கான ஆய்வுகள் தொடக்கம் - இடம் மாற்றப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
    X

    கோப்புபடம். 

    மயில்ரங்கம் அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கான ஆய்வுகள் தொடக்கம் - இடம் மாற்றப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

    • ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
    • வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டி கொண்டு வர வேண்டும்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் பி.ஏ.பி. பாசனத்தின் கடைமடை பகுதியான இறுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் மானாவாரி விவசாயம் மற்றும் ஆடு வளர்ப்பை விவசாயிகள் பிரதானமாக செய்து வருகின்றனர். மேலும் கிணறு, ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி முருங்கை சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்த்து வேறு வேலை வாய்ப்பு இல்லாததால், இப்பகுதி கிராமப்புற மக்கள் அருகில் உள்ள திருப்பூர், கரூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    மயில்ரங்கம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் பயன் பெறும் வகையில் அமராவதி ஆற்றில் மழைக்காலங்களில் உபரியாக செல்லும் நீரை தேக்கும் வகையில் கஸ்தூரிபாளையம்-மயில்ரங்கம் இடையே தடுப்பணை ஒன்றைக் கட்டினால், தேங்கும் தண்ணீர் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் பெருகும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் ஜுன்,ஜூலை மாதங்களில் பெய்யும் தென்மேற்கு பருவ மழையால் அமராவதி அணை முழுமையாக நிறைந்து விடுகிறது. மேலும் ஒரே ஆண்டில் 2 முறைக்கு மேல் உபரியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அமராவதி அணையில் உபரியாக வெள்ள நீர் திறக்கும் காலங்களில் ஏறக்குறைய 2 டிஎம்சி. அளவுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டு காவிரியில் கலந்து வருகிறது.

    இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், இந்த மாத துவக்கத்தில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழையால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து, கடந்த 14 ந் தேதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் அன்றைய தினம் அணைக்கு நீர் வரத்து 12500 கன அடி வரை இருந்ததால்,9 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் அன்று மாலை வரை அமராவதி ஆற்றில் 12 ஆயிரம் கன அடி வரை திறந்து விடப்பட்டது‌‌. மேலும் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளான குதிரையாறு, சண்முகா நதி, நல்லதங்காள் ஓடை மூலமும் நீர் வரத்து பெற்று உபரியாக நீர் காவிரியில் கலந்து வருகிறது.

    அமராவதி அணையின் முழு கொள்ளளவான 4 டிஎம்சி.யில், ஏறக்குறைய அதே அளவுக்கு உபரி நீரும் வெளியேற்றப்படுகிறது. நிலை இவ்வாறு இருக்க கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மயில் ரங்கம் பகுதியில் தடுப்பணை கட்ட ஆய்வுகள் நடந்ததாகவும், ஆனால் திடீரென தடுப்பணை அமைக்க அளவீட்டு பணிகள் மயில்ரங்கம் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி மேற்கு பகுதியில் அதிகாரிகள் நடத்தியதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சில முக்கிய பிரமுகர்களின் தென்னந் தோப்புகள் அங்கு உள்ளதால், அவர்கள் பயன்பெறும் வகையில் அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் இடம் மாறியுள்ளதாக மயில் ரங்கம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் அமராவதி ஆற்று நீரை தடுத்து பாசனத்துக்கு திருப்பும் வகையில் தாராபுரம், காங்கயம் பகுதிகளில் உள்ள நில அமைப்பு ஆற்றை விட உயரமாக உள்ளதால், சிறு அளவிலான தடுப்பணைகள் பல கட்டினால் தேங்கும் நீர் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும், விவசாயமும் பெருகும். ஆனால் தடுப்பணை கட்ட வாய்ப்புள்ள நில அமைப்பும், தேவையும் உள்ள இடங்களில் கட்டப்படாமல், அரசியல்வாதிகள் தலையீடு காரணமாக தேவையற்ற இடங்களுக்கு தடுப்பணை திட்டங்களை இடம் மாற்றுவதால் அது விவசாயிகளுக்கும் பயனில்லாமல், அந்த திட்டத்திற்கான நிதியும் வீணடிக்கப்படும் நிலை நிலவுகிறது.

    எனவே அமராவதி ஆற்றில் வெள்ள காலங்களில் உபரியாக செல்லும் நீரை மயில்ரங்கம் பகுதி பயன்பெறும் வகையில், அந்த பகுதியில் தடுப்பணை கட்டி தேக்குவதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடும், நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வாய்ப்பாக அமையும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் மேட்டூர் அணையில் உபரி நீர் திறக்கப்படும் சமயங்களில், தற்போது உபரி நீரை மேடான பகுதியில் உள்ள குளங்களுக்கு நீரேற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது போல், அமராவதி ஆற்றில் செல்லும் உபரி நீரில் ஒரு பகுதியை மிகவும் வறண்ட பகுதியாக உள்ள வெள்ளகோவில் பகுதியில் அமைந்துள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டி கொண்டு வர வேண்டும் எனும் கோரிக்கையும் பல ஆண்டாக கிடப்பில் உள்ளது‌. ஆனால் அமராவதி ஆற்றில் இருந்து வட்டமலைக் கரை ஓடை அணைக்கு கால்வாய் வெட்டும் திட்டத்துக்கு ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை சார்பில் திட்ட செலவுகள் குறித்த கருத்துரு மட்டும் அரசுக்கு அனுப்பப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×