என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
உழவன் செயலியில் அனைத்து கிராமங்களின் தகவல்களும் கிடைக்க நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்
- தமிழ் மண் வளம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
- தற்போது உழவன் மொபைல் செயலியிலும், குடிமங்கலம் வட்டார தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை
உடுமலை
தமிழக அரசு உழவன் மொபைல் செயலி வாயிலாக விவசாயிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.இதில் புதிதாக விவசாயிகள் தங்கள் மண் வளத்தை தெரிந்து கொள்ளும் வகையில், தமிழ் மண் வளம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம், சர்வே எண், நில உரிமையாளர் பெயர், மொபைல்போன் எண் ஆகிய தகவல்களை பதிவிட்டால் அந்த விளைநிலத்திலுள்ள மண்ணின் ஊட்டச்சத்து நிலை உள்ளிட்ட மண் வள அட்டையை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சேவையில் குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட எந்த வருவாய் கிராமமும் இடம் பெறவில்லை. இதனால், அவ்வட்டார விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
வேளாண்துறை சார்பில் மண் வள அட்டை வழங்க சில ஆண்டுகளுக்கு முன் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அப்போதே பல குளறுபடிகள் நிலவியது.தற்போது உழவன் மொபைல் செயலியிலும், குடிமங்கலம் வட்டார தகவல்கள் எதுவும் இடம் பெறவில்லை.
இது குறித்து வேளாண்துறையினர் ஆய்வு செய்து அனைத்து கிராமங்களின் தகவல்களும் துல்லியமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






