

திருப்பூர் :
திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் துவக்கிவைத்தனர்.முதல்கட்ட முகாமில் திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 16 பின்னலாடை நிறுவனங்கள் தேர்வு நடத்தின. இதில், 350 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களில், தேர்வு செய்யப்பட்ட 210 மாணவர்களுக்கு பணியில் இணைவதற்கான கடிதம் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக நடத்தப்பட்ட முகாமில் 15 பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தேர்வு செய்தன. இதில் பங்கேற்ற 230 மாணவர்களில் 160 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட முகாம் மூலம் மொத்தம் 370 மாணவர்களுக்கு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. நிப்ட்-டீ கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை தலைவர் சத்திய நாராயணன் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.