search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.17லட்சம் வழிப்பறி வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது
    X

    கோப்புபடம்.

    ரூ.17லட்சம் வழிப்பறி வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது

    • 3பேர் திடீரென வழிமறித்து பணப்பையை பறித்து சென்றனர்.
    • சென்னை நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் சர்புதீன்(44) பனியன் வேஸ்ட் வியாபாரி. கடந்த மாதம் 18ந் தேதி மதியம் திருப்பூர் குமார் நகர், முருங்கப்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் இருந்து ரூ. 17.50 லட்சத்தை வாங்கி வருமாறு தன்னிடம் வேலை பார்க்கும் சாகுல் ஹமீது என்பவரை அனுப்பினார். பணத்தை வாங்கி கொண்டு திரும்பிய போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த முக கவசம் அணிந்திருந்த 3பேர் திடீரென வழிமறித்து பணப்பையை பறித்து சென்றனர். புகாரின் பேரில் வேலம்பாளையம் போலீசார் விசாரித்தனர்.

    இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்தனர். அப்போது சாகுல் ஹமீது பணத்தை வாங்கிய பனியன் நிறுவனத்தில் வேலை செய்யும் மோகன்குமாருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழிப்பறி வழக்கில் கே.வி.ஆர்., நகரை சேர்ந்த மோகன்குமார்(20) உட்பட, 7 பேரை போலீசார் கைது செய்து 9 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    வழக்கில் தொடர்புடைய முக்கியமான நபர்களை தேடி சென்னைக்கு தனிப்படையினர் சென்று முகாமிட்டு தேடி வந்தனர். அதில் 2பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் ராஜ்குமார், (25) அருண்பாண்டி, (24) என்பதும், வழிப்பறி செய்த பணத்தின் மூலம் சென்னை நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 2பேரையும் கைது செய்து, 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நபரும் சிக்கும்பட்சத்தில் இந்த சம்பவம் குறித்து முழுமையாக தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×