search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி  பனிமய மாதா ஆலய திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்- முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில் ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்- முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    அமைச்சர்

    அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் சாருஸ்ரீ, வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    நடவடிக்கை

    திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும்.

    மேலும் திருவிழா கடைகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், உணவுகள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதையும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு திருவிழாவில் முறைப்படி கொடியேற்றத்துடன் எல்லா ஆராதனைகளும், தேர்பவனி, கொடிபவனி, நற்கருணைபவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

    கொடியேற்றம்

    மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை நேரடியாக தரிசிக்கலாம். அதே போன்று திருவிழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடைபெறும்.

    வருகிற 26-ந் தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள்உரை, அருள்இரக்கஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணைஆசீர் ஆகியவை நடைபெறும்.

    அரசின் விதிமுறை

    திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×