என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
    • விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்தா (வயது 67). இவரது மகன் பிரகாஷ். வசந்தாவின் சகோதரி ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 66).

    இவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பிரகாஷ் கவுண்ட்டருக்கு சென்றார்.

    அப்போது வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள், தங்கை மீது மோதியது. இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா, சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் சித்தி ரெயிலில் அடிப்பட்டு இறந்ததை பார்த்து பிரகாஷ் கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஆலங்காயத்தில் 3 நாட்கள் நடக்கிறது
    • போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் சுற்றுவட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை ஆக்கிரமிப்புகள் வரும் நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை அகற்ற படுவதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கே.கே.ஞானசேகரன் அந்தந்த போலீஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில் வாணியம்பாடி நெடுஞ்சாலை உட்கோட்டம் அப்துல்லாபுரம் முதல் ஆசனாம்பட்டு, ஆலங்காயம் திருப்பத்தூர் சாலை, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ராஜபாளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் ஆலங்காயம், வாணியம்பாடி சாலை, ஆலங்காயம் காலணி முதல் மார்கெட் சந்திப்பு சாலை வரை உள்ள ஜமுனாமரத்தூர் சாலை, பஸ் நிலையம் முதல் பைக் ேஷாரூம் வரை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

    அவ்வாறு ஆக்கிரமிப்பு களை அகற்றும் போது ஆக்கிரமிப்புகளை அகற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

    • பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்
    • அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 45). தனியார் ஷூ கம்பெனி பஸ் டிரைவர். இவர் இன்று அதிகாலை வேலைக்கு ஆட்களை ஏற்றுவதற்காக ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சை நிறுத்தி வைத்திருந்தார்.

    பெண்கள் உட்பட ஷூ கம்பெனி தொழிலாளர்கள் சிலர் பஸ்சில் ஏறிக்கொண்டிருந்தனர்.

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு கூரியர் ஏற்றி செல்லும் பார்சல் கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென தொழிலாளர்களை ஏற்றி கொண்டிருந்த பஸ் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பெண்கள் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 31-ந்தேதி கடைசி நாள்
    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள், பொது த்துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின்கீழ் வேலை வாய்ப்பு பெறுவதற்கு விளையாட்டு போட்டிகளில் 1.1.2018 அன்றோ அல்லது அதன் பிறகு பெற்ற சாதனைகள் தகுதியானவையாக கருதப்படும். சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.

    இணையதளத்தில் விண்ணப்பம்

    40 வயதுக்குட்பட்ட வர்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலும். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு பெற்றிடுவதற்கான இதர முழு தகுதிகளும் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாட்டினை சார்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு பெறு வதற்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்களை இணைத்து இணையதள முகவரி மூலமாகவோ அல்லது நேரு விளையாட்டு அரங்கில் இயங்கிவரும் தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இடம் சம்மந்தமாக 2 பேருக்கும் இடையே தகராறு
    • வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் (55) என்பவருக்கும் இடையே இடம் சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களான ராஜா (60), இவரது மனைவி நிவேஸ்குமாரி (45), கோகுல் ஆகியோர் சேர்ந்து, ஆறுமுகத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து ஆறுமுகம் கந்திலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கோவிந்தராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 நாட்களாக நடைபெற்றது
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார அளவிலான தமிழக அரசின் கலைத்திருவிழா போட்டிகள் வட்டாரக் கல்வி அலுவலர் சி.சித்ரா தலைமையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 18-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்களாக நடைபெற்றது.

    பள்ளியின் தலைமையாசிரியர் மகேஷ் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி எம்.எல். ஏ கோ. செந்தில்குமார் கலந்து கொண்டார்.

    இந்த போட்டிகளில் மாணவ மாணவியர்களால் இசைக்கருவிகள் வாசிப்பு, சிலம்பாட்டம், பறையாட்டம் கரகாட்டம், தெருக்கூத்து, உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடைபெற்றது.

    இதில் அதிமுக பேரூராட்சி செயலாளர் சிவகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாண்டியன், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் கலைநிக ழ்ச்சிகளை கண்டுகளித்தனர். முடிவில் ஆசிரியர் இராமு நன்றி கூறினார்.

    • பொதுமக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
    • மின்இணைப்புகளை துண்டித்த பின்பு, கடை மூட வேண்டும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழிற்சாலைகள் தீத்த டுப்பு கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் அதிகாரிகள், பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    திருப்பத்தூரில் 30 பட்டாசு கடைகள், நாட்றம்பள்ளியில் 15, வாணியம்பாடியில் 16 மற்றும் ஆம்பூரில் 4 என மொத்தம் 65 பட்டாசுகடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பட்டாசு கடைகளில் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பட்டாசு கடை உரிமம் வழங்கப்பட்ட கடையில் இதர பொருட்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது.

    வெடி பொருட்கள், மத்தாப்பு வகை பட்டாசுகளை குறிப்பிட்ட அளவிற்கு மிகாமல் இருப்பு வைத்து விற்பனை செய்யக்கூடாது. தண்ணீர் மற்றும் மணல் வாளிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    கடையின் அருகே பட்டாசு வெடிக்க அனுமதித்தல், சிறுவர்களின் பொறுப்பில் பட்டாசு விற்க அனுமதித்தல் ஆகியவை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

    மேலும் பட்டாசு கடைக்குள் அல்லது அருகில் திறந்த விளக்குகள், மெழுகுவர்த்தி, தீக்குச்சி மற்றும் தீப்பொறி ஏற்படுத்தும் மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது.

    திருமண மண்டபங்களில் பட்டாசு விற்பனை செய்யக் கூடாது. விற்பனை முடிந்ததும் கடையை மூடும் முன் மின்இணைப்புகளை துண்டித்த பின்பு, கடை மூட வேண்டும். விழிப்புணர்வு விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பொது மக்களின் உயிர் அச்சுருத்தல் இன்றி கடைகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.மு.க. முகவர்களின் (பூத் கமிட்டி) ஆலோசனை கூட்டம் நேற்று வாணியம்பாடி நியு டவுன் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் ஆ.சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் சாரதிகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் தேவராஜி எ.எல்.ஏ., வாணியம்பாடி தொகுதி பார்வையாளர் டி.செங்குட்டுவன் மற்றும் திமுக நிர்வாகிகள் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஞானவேலன்(ஆலங்காயம் மேற்கு), எஸ்.தாமோதிரன் (ஆலங்காயம் கிழக்கு), கே.ஆர்.திருப்பதி(திருப்பத்தூர் கிழக்கு), டி.சாமுடி (நாட்றம்பள்ளி கிழக்கு), உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளர் பூ.சதாசிவம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களிடையே எதிர்கால வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து அறிவுரை
    • அதிகாரிகள் உடனிருந்தனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்கு சாவடி மையத்தில் மாதிரி வாக்கு சாவடி மையம் அமைத்து விழிப்புனர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடையே எதிர்கால வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கினர்.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பானுமதி படிவம் 6 மற்றும் 7 இன் முக்கியத்துவம் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், தேர்தல் பணி வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர்கள் அன்னலட்சுமி, வனிதா கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையம்
    • கேழ்வரகு விதை, கொள்ளு, மா மற்றும் எலுமிச்சை செடி

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையம் சார்பில் பழங்குடியின விவசாயிகள் நலத்திட்ட மூலம் விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அரிவாள், களைக்கொத்து, கேழ்வரகு விதை, கொள்ளு, மா மற்றும் எலுமிச்சை செடி உள்ளிட்ட விவசாய இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றி 100 விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கினார்.

    • கலெக்டர் தகவல்
    • இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அதாவது, பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் போட்டோ ஆதார் அட்டை, உரிம கட்டணம் ரூ.500 (அரசு கருவூலத்தில் செலுத்தும் சீட்டு மூலம்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டிடமாக இருந்தால் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி (ஏ4 அளவில்), விண்ணப்பங்களை வரும் 24-ந் தேதி வரை மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    அதன் பிறகு பெறப்படும். விண்ணப்பங்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வாணியம்பாடியில் லியோ திரைப்படம் வெளியானது
    • போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள சிவாஜி சினிமாஸ் 3 தியேட்டர்களில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வெளியிடப்பட்டது.

    இந்த சிவாஜி தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் மேள தாளங்களுடன் உற்சாகமாக நடனமாடினர். மேலும் ஒரே வளாகத்தில் 3 தியேட்டர்கள் உள்ளதால் விஜய் ரசிகர்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்.

    அப்போது விஜய் ரசிகர்கள் திரையரங்கு ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர். மேலும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    அப்போது ஒரு ரசிகர் பல் துவக்கும் பிரஷ் கையில் எடுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    திரைப்படம் வெளியா னதும் விஜய் என்ட்றி கொடுக்கும் காட்சிகள் வந்த போது விஜய் ரசிகர்கள் செல்போன் வெளிச்சம் காட்டி உற்சாகமாக நடனமாடி திரைப்படத்தை வரவேற்றனர்.

    மேலும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாக காணப்ப ட்டதால் அதிக அளவில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×