என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே விதவையை காதலித்து மணந்த வாலிபர் கொலை
- காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பாலசுப்பிரமணியின் மனைவி ஹேமசுதா கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது காரமடை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே காரமடை வடமங்களக்கரை பகுதியை சேர்ந்தவர் ஹேமசுதா (25). இவரது கணவர் பெருமாள்ராஜ் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அதன்பிறகு ஹேமசுதாவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பாலசுப்பிரமணி குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் எதிர்ப்பை மீறி ஹேமசுதாவை, பாலசுப்பிரமணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் தனியாக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பாலசுப்பிரமணி தனது தாயாரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டில் பாலசுப்பிரமணியின் அண்ணன் பாலமுருகன் இருந்தார்.
அவர் பாலசுப்பிரமணியை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். எங்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தவன், இப்போது இங்கு ஏன் வந்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பாலசுப்பிரமணியும் எதிர்த்து பேசவே 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன், கத்தியை எடுத்து தம்பி என்றும் பாராமல் பாலசுப்பிரமணியை குத்தினார். இதில் அவரது தலையில் கத்திக்குத்து ஏற்பட்டது. படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பாலசுப்பிரமணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி நேற்று உயிரிழந்தார்.
இதுதொடர்பாக பாலசுப்பிரமணியின் மனைவி ஹேமசுதா கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகன் மீது காரமடை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாலமுருகன் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் காரமடை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






