என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை- முன்விரோதத்தில் கும்பல் வெறிச்செயல்
    X

    கொலை செய்யப்பட்ட முகேஷ்.

    நெல்லையில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை- முன்விரோதத்தில் கும்பல் வெறிச்செயல்

    • போலீசார் அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • முகேசின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சின்னகுட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் முகேஷ்(வயது 30). இவர் உணவு பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். இவரது ஊரில் உள்ள கோவில் விழா ஒன்றுக்காக பொருட்கள் வாங்குவதற்காக முகேஷ் தனது தந்தையுடன் நேற்று மாலை வண்ணார்பேட்டைக்கு வந்து விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார்.

    தொடர்ந்து இரவு 9 மணிக்கு உணவு டெலிவரி செய்ய செல்வதாக கூறிவிட்டு முகேஷ் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் நள்ளிரவு நேரம் வரையிலும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சுபிதா அவரது செல்போனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சுபிதா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, குருந்துடையார்புரம் பகுதியில் அவர்கள் முகேசை தேடி பார்த்துள்ளனர். அப்போது ரெயில்வே தண்டவாளம் முன்பாக சாலையில் மோட்டார் சைக்கிள் கிடந்தது. மேலும் அங்குள்ள முட்புதரில் முகேஷ் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து சுபிதா கதறி அழுதார்.

    இதுகுறித்து பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. உடனடியாக உதவி கமிஷனர் பிரதீப் மற்றும் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, முகேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் முகேசுக்கும், கீழவீரராகவபுரத்தில் அதே தெருவில் வசிக்கும் சின்னகுட்டி என்பவருக்கும் இடையே கோவில் பிரச்சனையில் அடிதடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வரும் நிலையில், ஒரு வழக்கில் சின்னகுட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த முன்விரோதத்தில் ஆத்திரம் அடைந்த சின்னகுட்டி, தனது சகோதரரின் மகனான அழகு முத்து(24) என்பவரிடம் எப்படியாவது முகேசை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அழகு முத்து தனது நெருங்கிய நண்பரான முருகேஷ்(24) மற்றும் அவரது நண்பர் கிரி(20) மற்றும் சிலருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே முகேசின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சின்னகுட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை. இதனால் அவரது வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடினர். வீட்டையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். உடனே போலீசார் அங்கு சென்று முகேசின் உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதனையொட்டி அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×