search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவியின் ஆபாச படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
    X
    கைதான ஜேசுதாஸ்

    மாணவியின் ஆபாச படத்தை அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

    • ஷேர்சாட் மூலம் பழகிய மாணவியை ஆசை வார்த்தை கூறி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • பின்னர் மாணவியின் தந்தையிடம் ஜேசுதாஸ் நானும் உங்களது மகளும் ஒன்றாக இருக்கும் படத்தை அனுப்பி இருக்கிறேன். நீங்கள் பணம் தரவில்லை என்றால் இந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தற்போது பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டம் என்பதால் இந்த மாணவி ஆன்லைன் மூலம் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வந்தார்.

    அப்போது ஷேர்சாட் என்ற செயலின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த வயலூரை சேர்ந்த ஜேசுதாஸ் (21) என்ற வாலிபர் மாணவிக்கு பழக்கமாகி உள்ளார்.

    இதன் பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். இதையடுத்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாலிபர் ஜேசுதாஸ் மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது ஜேசுதாஸ் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு முத்தம் கொடுத்து உள்ளார். அதனை அந்த மாணவிக்கு தெரியாமல் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

    பின்னர் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். அதன் பின்னர் ஜேசுதாஸ் பலமுறை மாணவியின் வீட்டிற்கு வந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் ஜேசுதாஸ் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜேசுதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ்-அப்பிற்கு மாணவியுடன் தான் நெருக்கமாக இருக்கும் ஒரு போட்டோவை அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தையிடம் ஜேசுதாஸ் நானும் உங்களது மகளும் ஒன்றாக இருக்கும் படத்தை அனுப்பி இருக்கிறேன். நீங்கள் பணம் தரவில்லை என்றால் இந்த ஆபாச படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

    இதையடுத்து மாணவி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜேசுதாசை தேடி வந்தனர். அப்போது ஜேசுதாஸ் கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் ஜேசுதாசை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும், மாணவி தன்னுடன் இருக்கும் படத்தை அவரது தந்தைக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜேசுதாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×