search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுமேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது
    X

    ஆடுமேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது

    • பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.
    • சூலூர் போலீசார் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்லத்துரையை கைதுசெய்தனர்.

    சூலூர்:

    சூலூரை சேர்ந்த 37 வயது பெண்மணி சம்பவத்தன்று வழக்கம்போல ஆடுகளை மேய்க்க சென்றார். அப்போது அங்கு ஒரு வாலிபர் குடிபோதையில் வந்தார்.

    ஆள்அரவம் இல்லாத பகுதியில் பெண்மணி ஆடு மேய்ப்பதை பார்த்ததும் அவருக்கு சபலம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் நைசாக பெண்ணின் அருகில் சென்றார்.

    பின்னர் அவரை கீழே தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார்.

    எனவே ஆத்திரம் அடைந்த வாலிபர் கல் வீசி தாக்கினார். இதில் பெண்மணிக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதற்கிடையே பெண்மணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

    இதையடுத்து அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் பொதுமக்கள் விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அப்போது வாலிபர் திமிராக பேசியதாக தெரிகிறது. எனவே ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.

    தொடர்ந்து அந்த வாலிபர் சூலூர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். எனவே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராமலிங்கம் மகன் செல்லதுரை (வயது27) என்பது தெரியவந்தது.

    இவர் கோவையில் தங்கி கூலிவேலை பார்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் அவர் சூலூர் தென்னந்தோப்பில் கள் குடிப்பதற்காக வந்திருந்தார். அங்கு ஆள்அரவம் இல்லாத பகுதியில் ஆடு மேய்த்த பெண்ணை பார்த்ததும் அவருக்கு சபலம் ஏற்பட்டது.

    தொடர்ந்து அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சூலூர் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென அப்பநாயக்கன்பட்டி- சூலூர் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து அங்கு பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    தொடர்ந்து சூலூர் போலீசார் ஆடு மேய்த்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக செல்லத்துரையை கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சூலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×