search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி வாலிபர் கொலையில் நண்பர் கைது
    X

    தூத்துக்குடி வாலிபர் கொலையில் நண்பர் கைது

    • கோடாவிளை கடற்கரை பகுதியில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திசையன்விளை:

    தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கில்டஸ் மகன் ஜஸ்டின் (வயது 22).

    இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கேட்டரிங் முடித்துள்ள இவர், கப்பல் பணிக்காக நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2 நாட்கள் பயிற்சிக்காக கடந்த 2-ந்தேதி வந்தார்.

    இந்நிலையில் அவர், நேற்று உவரி அருகே உள்ள கோடாவிளை கடற்கரை பகுதியில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், ஜஸ்டினை அவரது நண்பரான தூத்துக்குடி 2-ம் கேட் பகுதியை சேர்ந்த கணேஷ்(22) என்பவரும், மற்றொரு வாலிபரும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    கைதான கணேஷ்

    நானும், ஜஸ்டினும் 10-ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். சமீபத்தில் அவர் கப்பலுக்கு வேலைக்கு செல்ல ஆசைப்படுவதாக தெரிவித்தார். இதற்காக திசையன்விளையில் உள்ள மரைன் கல்லூரியில் பயிற்சிக்கு சேர்ந்தால் சான்றிதழ் கிடைக்கும். அதற்கு ரூ.3,600 செலவாகும் என்று நான் கூறியதை கேட்டு ஜஸ்டின் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து பணத்துடன் வந்த ஜஸ்டினை திசையன் விளையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைத்தேன்.

    அங்கு நாங்கள் 2 பேரும் மது குடித்தோம். அப்போது ஜஸ்டின் என்னை தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனது நண்பரான மற்றொரு தூத்துக்குடி வாலிபரை போன் செய்து வர வழைத்தேன்.

    பின்னர் நாங்கள் 3 பேரும் கோடாவிளை கடற்கரைக்கு சென்று அங்கு வைத்தும் மது அருந்தினோம். அப்போதும், ஜஸ்டின் எங்களை அவதூறாக பேசினார். இதனால் என்னுடன் வந்த வாலிபர் ஜஸ்டினின் கழுத்தை கத்தியால் அறுத்து, மார்பிலும் குத்தினார். பின்னர் நாங்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கணேஷ் கூறியதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தப்பி யோடிய மற்றொரு வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×