search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் ஆத்திரம்: தாயை சரமாரி அரிவாளால் வெட்டிய மகன்
    X

    கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் ஆத்திரம்: தாயை சரமாரி அரிவாளால் வெட்டிய மகன்

    • கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார்.
    • சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்புசாமி நாயுடுபுரத்தில் சாலையோரம் தள்ளுவண்டி கடை வைத்து பலகாரம் தயாரித்து விற்பனை செய்து வருபவர்கள் கணேச மூர்த்தி-மாரீஸ்வரி தம்பதியினர். நேற்று மாலை வழக்கம்போல் தள்ளுவண்டியில் பலகாரம் செய்து வியாபாரம் நடத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை திடீரென எடுத்து அவர்கள் இருவரையும் சராமாரியாக வெட்டியுள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கம் இருந்த மக்கள் அங்கிருந்து சிதறி அடித்து ஓடினர். அப்போது தள்ளுவண்டி கடை அருகே இருந்த கணேசமூர்த்தியின் சகோதரர் ரமேஷ், அங்கு ஓடிவந்து அரிவாளால் வெட்டியவரை தடுத்து, அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கினார். பின்னர் கணேசமூர்த்தி அந்த அரிவாளை பிடுங்கி அந்த மர்மநபரை வெட்டினார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மாரீஸ்வரி உடல்நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் உள்ளார். இந்நிலையில் கணேசமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் பல்லடத்தில் அவர்கள் வசித்து வந்தது மாரீஸ்வரியின் மகன் புஷ்பராஜுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ், கோவில்பட்டியில் இருந்து பல்லடத்திற்கு சென்று தனது தாய் மாரீஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரை அரிவாளால் வெட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் மது குடித்ததை தட்டி கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்பு மீண்டும் அரிவாள் கலாசாரம் தலை தூக்கியது பல்லடம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×