search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொன்ற போலீஸ்காரர்
    X
    சாக்குமூடையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு.

    காதல் விவகாரத்தில் வாலிபரை கடத்தி கொன்ற போலீஸ்காரர்

    • மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.

    ராஜபாளையம்:

    மதுரை சி.எம்.ஆர். சாலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி பேஸ்புக்கில் பேசிக்கொண்டனர். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    மாரிமுத்துவின் காதலியை ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வில்வதுரை என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. வில்வதுரை நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியனில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    ஒரே பெண்ணை 2 பேர் காதலித்து வந்ததால் மாரிமுத்துவுக்கும், வில்வதுரைக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அடிக்கடி இவர்களுக்குள் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்து உயிரோடு இருந்தால் காதலியை திருமணம் செய்து கொள்ள முடியாது என எண்ணிய வில்வதுரை அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி கும்மிடிப்பூண்டியில் வேலையை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்த மாரி முத்துவை, வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து பேசி யுள்ளனர். பின்பு அவரிடம் வில்வதுரை நைசாக பேசி காரில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது காதலியுடன் பழக்கத்தை கைவிடுமாறு மாரி முத்துவிடம் வில்வதுரை கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கு அழைத்து வந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள், மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த வில்வதுரை மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்துவின் உடலை ஒரு சாக்கு மூட்டை யில் கட்டி காரில் வைத்து செய்வதறியாது ஊர் சுற்றி வந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய் பகுதியில் வந்தபோது ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து சாக்குமூட்டையை கண்மாயில் போட்டுவிட்டு கொலை கும்பல் அங்கிருந்து தப்பியது.

    இதற்கிடையே மாரிமுத்து மாயமானது தொடர்பாக அவரது தந்தை துரைப்பாண்டி கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மாயமான மாரிமுத்துவுக்கும், வில்வ துரைக்கும் முன்பகை இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர் வில்வதுரையை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாரிமுத்துவை நண்பர்கள் உதவியுடன் காரில் கடத்திக்கொண்டு சென்று அடித்துக்கொலை செய்து உடலை கண்மாயில் வீசியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வில்வதுரை, அவரது நண்பர்கள் இசக்கிராஜா, ரவிக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், மாரிமுத்துவின் உடலை வீசியதாக கூறப்பட்ட ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் இரட்டை கண்மாய்க்கு அழைத்து சென்றனர்.

    அவர்கள் கூறிய இடத்தில் தேடிப்பார்த்தபோது சாக்குமூட்டை கிடந்தது. அதில் மாரிமுத்துவின் உடல் எலும்புக்கூடான நிலையில் கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் விவகாரத்தில் போலீஸ்காரர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபரை கடத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×