search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ 2 ரோபோக்கள் அறிமுகம்
    X

    தானியங்கி ரோபோ

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ 2 ரோபோக்கள் அறிமுகம்

    • கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
    • புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடான ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

    தினசரி 20-க்கு மேற்பட்ட விமானங்களில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர். கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவ தனி உதவி மையம் உள்ளது. அந்த உதவி மையத்தை செல்போன் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பயணிகள் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் தானியங்கி ரோபோக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அதிநவீன ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்டது. இதன் மூலம் பயணிகளுக்கு தேவையான தகவல்களை எவ்வித உதவியும் இன்றி தானாக வழங்க முடியும்.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இன்று மாலை 3 மணி முதல் ரோபோக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரோபோக்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தானாக நகரும் தன்மை கொண்டது.

    ரோபோ விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை வரவேற்று, அவர்களுக்கு தேவையான தகவல்களை அளிக்கும். இதற்காக அந்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டு உள்ளது. பயணிகள் உதவி மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினால், ரோபோ உடனடியாக உதவி மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை அளிக்கும்.

    இந்த ரோபோக்கள் பயணிகள் விமானத்திற்கு செல்ல வேண்டிய வழி, பாஸ்போர்ட் சரிபார்ப்பு இடம் உள்ளிட்ட இடங்களுக்கான வழிகளை பயணிகளுக்கு தெரிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிதாக நிறுவப்பட்டு உள்ள இந்த ரோபோக்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

    Next Story
    ×