என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூதலூரில் ரெயிலை மறித்து விவசாயிகள் போராட்டம்: 200 பேர் கைது
- காவிரி நீர் வழங்காத கர்நாடகா, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
- திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரெயிலை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர்:
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்க மறுத்ததால் இந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெருமளவில் குறுவை பயிர்கள் காய்ந்து கருகி விட்டன. எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகா அரசு மற்றும் நீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும், தண்ணீரின்றி வாடி சேதமான பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று தஞ்சை மாவட்டம் பூதலூர் ரெயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமையில் பொருளாளர் மணிமொழியன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமலநாதன் உள்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.
பின்னர் காவிரி நீர் வழங்காத கர்நாடகா, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் திரண்டு ரெயில் நிலையத்துக்குள் நுழைந்தனர். தண்டவாளத்தில் கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் விரைவு ரெயிலை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பலர் ரெயில் மீது ஏறி நின்றும், தண்டவாளத்தில் படுத்து கிடந்தும் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. இதனால் ரெயில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதனை தொடர்ந்து 30 நிமிடம் தாமதமாக சோழன் விரைவு ரெயில் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவத்தால் பூதலூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.






