என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
- எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார்.
- பவானி நசியனூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வழிப்பாடு செய்தார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல் தே.மு.தி.க.வும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்து உள்ளது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டனர்.
மேலும் டி.டி.வி. தினகரனும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளார். இதே போல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார். அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார்.
இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார். பவானி நசியனூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு வந்தார்.
அங்கு ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பூத் கமிட்டி, தேர்தல் வெற்றி வியூகங்கள், பிரசார யுக்தி குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.






