search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்
    X

    மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்- எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

    • வழக்கமாக, தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் ஐகோர்ட்டை தலையிடும்படி மனுதாரர் கோர முடியாது.
    • கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    இந்த வழக்கில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. கட்சியில் தற்போது இடைக்கால பொதுச்செயலாளர் பதவியே உள்ளது. ஆனால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை இந்த வழக்கில் தவறாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது கட்சியின் உறுப்பினரே அல்ல.

    கடந்த 2022 ஜூன் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன் ஜூன் 14-ந்தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

    இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி, என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும் ஏற்று பதிவு செய்து கொண்டது.

    கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் சட்ட ஆணையம் தனக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் ஜி 20 மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுக்குழுவும், கட்சி உறுப்பினர்களும் ஜெயலலிதாவை தங்கள் இதயத்தில் தெய்வமாக, அன்னையாக நிறுத்தியுள்ளனர். கலைக்கப்பட்ட பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதும், மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாறுவதும் தொண்டர்கள் மற்றும் பொதுக்குழுவின் விருப்பம்.

    வழக்கமாக, தனிப்பட்ட சங்க விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது என்பதால், உள்கட்சி விவகாரங்களில் இந்த ஐகோர்ட்டை தலையிடும்படி மனுதாரர் கோர முடியாது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

    கட்சியின் பெரும்பான்மையினரின் முடிவை சிறுபான்மையினர் முடக்க முடியாது. கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது.

    கட்சியின் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை தாக்கிய மனுதாரருக்கு பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில், கட்சியில் இருந்து தன்னை நீக்க அவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என மனுதாரர் கூற முடியாது.

    கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை. அதனால், எந்த நிவாரணமும் கோர முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×