என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மீது சரக்கு வாகனம் மோதி 2 தொழிலாளர்கள் பலி
- ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குரும்பபட்டி செம்மேடு பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் சின்னத்தம்பி (வயது 40). வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அன்பழகன் (30). இவர்கள் 2 பேரும் கூலித் தொழிலாளர்கள்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் வேலைக்கு சென்று கொண்டு இருந்தனர். பைக்கை அன்பழகன் ஓட்டிச் செல்ல பின்னால் சின்னத்தம்பி அமர்ந்திருந்தார். மேட்டுப்பட்டி அருகே இவர்கள் வந்த போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவர்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சாணார்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்த 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இருந்தபோதும் அவர்கள் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த அன்பழகனுக்கு அழகுநாச்சி என்ற மனைவியும், நவீன்குமார் (11), கோபி (6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சின்னத்தம்பிக்கு லதா என்ற மனைவியும், அருண்குமார், அஜய்குமார், தேவி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.






