search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த 10 நாளில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    காதல் திருமணம் செய்த 10 நாளில் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

    • காதல் திருமணம் செய்த 10 நாளில் புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வளையப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் மாரியப்பன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவரது மகள் சீதாலட்சுமி (16). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்கள் அண்ணன்-தங்கை உறவு முறை என கூறப்படுகிறது.

    இதனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்களை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிந்துபட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியை தேடி வந்தனர்.

    இதனிடையே வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு திருப்பூர் சென்றனர். திருப்பூரில் செரங்காடு கடுகுகாரர் தோட்டம் பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து குடியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தண்ணீர் பிடிப்பதற்காக அக்கம்பக்கத்தினர் சீதாலட்சுமியை தேடினர். ஆனால் அவரது வீடு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி அழைத்தும் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்துள்ளனர். அப்போது மாரியப்பன்-சீதாலட்சுமி இருவரும் கயிற்றில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், திருப்பூரில் இருப்பதை பெற்றோர் கண்டுபிடித்து விட்டதால், இனி நம்மை பிரித்துவிடுவார்கள் என்று நினைத்து இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    மேலும் அவர்களது வீட்டில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், எங்கள் விருப்பப்படி வாழ திருப்பூர் வந்தோம். ஆனால் எங்களை வாழ விடவில்லை. எங்களது இந்த முடிவுக்கு சிலர் காரணம், 100 வருடம் சந்தோஷமாக வாழ விருப்பப்பட்டோம், வேறு வழியின்றி இந்த முடிவு எடுத்துள்ளோம்." கூறியிருந்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×