search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் பகுதிகளில் வாழைத்தார் விலை திடீர் வீழ்ச்சி
    X

    பரமத்தி வேலூர் பகுதிகளில் வாழைத்தார் விலை திடீர் வீழ்ச்சி

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதியில் வாழைத்தார் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது.
    • கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்க லம், பொத்தனூர், பரமத்திவேலூர், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மோகனூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, கரூர் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் வாழைத் தோப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சிறு விவசாயிகள் விளைவிக்கும் வாழைத்தார்களை விற்பனை செய்ய பரமத்திவேலூரில் தினசரி வாழைத்தார் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆயுத பூஜைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் இன்று வாழை தாருக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் வாழைத்தார்களை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூவாயிரத்துக்கும் அதிகமான வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வராததால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை.

    கடந்த வாரம் ரூ. 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. கடந்த வாரத்தில் ரூ.400 ரூபாய்க்கு விற்பனையான பச்சை நாடன் தற்போது ரூ. 300 முதல் ரூ.350- க்கு விற்பனையானது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ரஸ்தாலி, கற்பூரவள்ளி ரக வாலைத்தார்கள் இன்று விலை அதிகரித்து ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி அடைந்தது. ஆயுத பூஜையை ஒட்டி வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு வாழைத்தார் விலை வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×