search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தச்சநல்லூரில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை-கலெக்டர், துணை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    X

    கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த தொழிலாளி மாயாண்டியின் குடும்பத்தினர் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள்.

    தச்சநல்லூரில் கொலை செய்யப்பட்ட தொழிலாளி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை-கலெக்டர், துணை போலீஸ் கமிஷனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

    • கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
    • மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்வதாக அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    நெல்லை:

    தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு நாடார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 57). இவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    கொலை

    கடந்த 26-ம் தேதி கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்ற மாயாண்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. கடந்த 1-ம் தேதி அவர் தாழையூத்து சிதம்பரம் நகர் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இது தொடர்பாக தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி அவருடன் பணிபுரிந்த மாரிமதன் (25) என்பவரை கைது செய்தனர். மாயாண்டியிடம் இருந்த ரூ.12 ஆயிரம் பணத்தை திருடுவதற்காக அவரை கொலை செய்ததாக மாரிமதன் வாக்குமூலம் அளித்தார்.

    3-வது நாளாக போராட்டம்

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் குடும்பத்தினர் ரூ. 25 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது. அவர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாயாண்டியின் மனைவி புஷ்பம் தனது 2 மகள்கள் மற்றும் கரையிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மனு அளிக்க வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக நெல்லை மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயா சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர்.

    கலெக்டர் பேச்சுவார்த்தை

    கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை வழங்கினர். அந்த மனுவில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் வேண்டும் என கேட்டிருந்தனர். அது குறித்து உடனடியாக பரிசீலனை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.

    அவர்களுக்கு ஆதரவாக மாநில இளைஞரணி தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

    அவர்களுடன் நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வதாக அவர் உறுதியளித்தார்.

    மேலும் மாயாண்டியின் 2 மகள்களும் நன்றாக படித்துள்ளனர் என்பதால் அவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

    இதனையடுத்து மாயாண்டியின் உடலை பெற்றுக் கொள்வதாக அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.

    Next Story
    ×