search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆனைமலை அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் 2 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    ஆனைமலை அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் 2 பவுன் நகை-பணம் கொள்ளை

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தியை கைது செய்தனர்.
    • பாப்பாத்தியிடமிருந்து 2 பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, பணம் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அருகே உள்ள நரிக்கல்பதி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். டிரைவர்.

    இவரது மனைவி மகாதேவி(வயது38) இவர் அந்த பகுதியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் தங்கள் தாய், மாமியார் மற்றும் குழந்தைகளுடன் ஓரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் இவர்களுக்கு அதே ஊரை சேர்ந்த ஒருவர் ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்தார். அதனை வாங்கி மகாதேவி தனது வீட்டு பீரோவில் வைத்தார். பீரோவில் 2 செயின், ஒரு ஜோடி கொலுசும் இருந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகாதேவி வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் பீரோவில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது, வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 ஜோடி கொலுசு, 2 பவுன் செயின் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது வீட்டிற்குள் பெண் ஒருவர் சென்று வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்பது தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் போலீசார் பாப்பாத்தியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தியை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 2 பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, பணம் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×