ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத் துறைகளின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் உரம் இருப்பு குறித்தும், தோட்டக்கலைத் துறையில் செயல் நிலவரங்களையும், வேளாண் விற்பனை மையத்தின் மூலம் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகள் உடைய வருகை பயன்பாடு குறித்தும் கேட்டறியப்பட்டது.கால்நடைத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை, அரசிற்கு நெல் அரவை செய்து கொடுக்கும் அரிசி ஆலைகளில் ஆய்வு குறித்தும், அரிசியின் தரம் மற்றும் ஆய்வுகள் குறித்தும் கேட்டு அறியப்பட்டது.
சுகாதாரத்துறை மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதும், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களின் நிலவரங்களையும், மாவட்ட தொழில் மையம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இல்லம் தேடி கல்வியின் செயல்பாடுகள் குறித்தும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் செயல்பாடுகள் குறித்தும், வருவாய்த்துறையின் மூலம் நிலுவையில் இருந்து வரும் நிலப் பரிமாற்றங்கள், நில ஒப்படைப்பு பட்டாக்கள், நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டு அறியப்பட்டது.
மேலும் கண்காணிப்பு அலுவலர் பேசுகையில், பிறந்த நிலையில் உள்ள பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க வேண்டும், தமிழக அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கு நிதி பெறுவதற்கு காலதாமதம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதிகள் குறித்தும், சம்பந்தப் பட்ட துறைகள் கலெக்டர் மூலமாக கடித வரைவு வழங்கி அதனை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவையான உதவிகளை அரசிடமிருந்து பெற்று திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக பெற்று தரப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.