search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூராட்சி கவுன்சில் கூட்டம்
    X

    பேரூராட்சி கவுன்சில் கூட்டம்

    • சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணை சேர்மன்: சாயல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து அந்த பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காமராஜ்: 14-வது வார்டில் உள்ள குடிநீர் பைப் லைன்கள் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை. அவை சேதமடைந்துஅந்த பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பெற முடியாமல் உள்ளனர். புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி வி.வி.ஆர். நகர், நொண்டி பெருமாள் ஊரணி பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க பலமுறை வலியுறுத்தியும் பூங்கா அமைக்கவில்லை. விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் அழகர் வேல் பாண்டியன்: சாயல்குடி பொது மயானத்தை மின்சார மயானமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் மாணிக்கவேல்: 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் குமரையா: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து அண்ணாநகர் வழியாக இரு வேலி பகுதிக்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர்ச ண்முகத்தாய் சுப்பிரமணியன்: சாயல்குடி சிவன் கோவில் ஊரணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாயல்குடி பெரிய கண்மாயில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் தொட்டி அமைக்க வேண்டும்..

    கவுன்சிலர் ஆபிதா அனிபா: அண்ணா, இருவேலி பகுதியில் இருந்து பெரிய கண்மாய் கரை முதல் கூரான் கோட்டை விலக்கு ரோடு வரை கண்மாய் கரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் இந்திரா செல்லத்துரை: எனது வார்டில் இதுவரை எந்த பணிகளும் செய்து தரவில்லை எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் மாணிக்க வள்ளி பால்பாண்டியன், இந்திராணி பானுமதி, அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக அளித்தனர். இந்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி பெற்று பணிகள் நடைபெறும் என சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

    Next Story
    ×