search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே  குழி தோண்டி பொதுமக்கள் போராட்டம்
    X

    மேட்டுப்பாளையம் அருகே குழி தோண்டி பொதுமக்கள் போராட்டம்

    • காளான் உரத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது.
    • மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து துர்நாற்றம் வெளியேறுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காளான் உரம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. காளான் உரம் தயாரிக்க மூலப்பொருட்களை மக்க வைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

    இதனால் இந்த காளான் உரத்தொழிற்சாலையை மூடக் கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தொழிற்சாலை செயல்பட எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மூட வேண்டும் என கோரி கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் உரிய தீர்வு கிடைக்காததால் நேற்று அந்த காளான் உரத்தொழிற்சாலைக்கு செல்லும் பாதையில் ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டி பாதையை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் அந்த தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை போலீசார் மற்றும் வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர் பசீர், ஊராட்சி தலைவர் ரங்கசாமி, வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்று காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாக பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில் முறையான அனுமதி பெற்றே தொழிற்சாலை செயல்படுகிறது. எங்களுக்கு நிலத்தை விற்பனை செய்தவர்களின் குடும்பத்தில் உள்ள சொத்து பிரச்சினையில் எங்களை மிரட்டி வருகி ன்றனர். இந்நிறுவனத்தின் மூலம் சுற்றுவட்டார மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும் சட்டப்படி அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே இத்தொ ழிற்சாலை செயல்படுகிறது என தெரிவித்தனர்.

    Next Story
    ×