என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு- பொதுமக்கள் போராட்டம்
- சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யாவின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 2-வது வார்டுக்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில், வளம் மீட்பு பூங்கா ஏற்படுத்தி அங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் அரியன்வாயல் பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் மற்றும் குடியிருப்பு நல சங்கத்தினர் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அப்பகுதி காட்டூர் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அரியன்வாயல் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் குப்பைகளை கொட்டுவதற்கு பதிலாக வேறு இடத்தில் கொட்ட வேண்டும். குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர். போராட்டத்தின் போது அவ்வழியாக தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யாவின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






