என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சியில் வருகிற 27-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
- 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 50 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகிற 27-ந் தேதி பொள்ளாச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவையில் நடந்தது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கணேசன் கூறும்போது,
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 11 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐ.டி.ஐ) சேர்த்து 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. 50 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளை போல ஆட்டோமிசின், ரோபோடிக் பயிற்சிகள் வழங்கும் நவீனமான தொழிற்பயிற்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






