என் மலர்
உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையில் 10008 விநாயகர் சிலைகள் அமைக்க முடிவு
- குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
- தமிழகம் முழுவதும் இந்துமுன்னணி சார்பில் ஆகஸ்டு 27-ந்தேதி கோவில்களில் உழவாரப்பணி நடைபெற உள்ளது.
கோவை,
கோவை குனியமுத்தூரில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆடி வெள்ளியை முன்னிட்டு இந்து அன்னையர் முன்னணி சார்பில் வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி 1008 பெண்கள் பங்கேற்கும் அம்மன் மஞ்சள் நீர் அபிஷேக ஊர்வலம் பிரமாண்டமாக நடக்க உள்ளது. மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 10,008 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
அப்போது குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், திருவிளக்கு பூஜைகள் ஆகியவை நடத்தப்படும். கோவை மாநகரில் நடக்கும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு பேசுகிறார்.
தமிழகம் முழுவதும் இந்துமுன்னணி சார்பில் ஆகஸ்டு 27-ந்தேதி கோவில்களில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. இதில் இந்துமுன்னணியினரோடு பொதுமக்களும், ஆன்மீக அமைப்புகளும் இணைந்து பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில நிர்வாககுழு உறுப்பினர் சதிஷ், மாவட்ட தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட பொதுசெயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ்வரன், ஆனந்த், ரமேஷ், மாவட்டத் துணைத் தலைவர் சோமசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






