search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் தேருக்கு வடம் பொருத்தும் பணி தொடக்கம்

    • ஆனித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
    • தேரோட்டத்தை ஒட்டி நாளை மறுநாள் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் ஆனி தேரோட்டம் நடைபெறவில்லை.

    தேரோட்டம்

    இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    தேரோட்டத்தில் விநாயகர், சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வருவார்கள்.

    வடம் பொருத்தும் பணி

    தேரோட்டத்தை காணவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.

    தேரோட்டத்திற்கு தேரை தயார்படுத்தும் பணி தொடங்கி தேர்களை சுத்தம் செய்தல், குதிரை பொம்மைகளை பொருத்துதல், கம்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடிவடைந்து விட்டது. இன்று தேருக்கு வடம் கயிறு கட்டும் பணி நடைபெற்றது.

    வீதி உலா

    விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இந்து சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    7-ம் நாள் திருவிழாவான இன்று காலை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோர் பல்லக்கு சப்பரத்தில் தவழ்ந்த கோலத்தில் 4 ரத வீதிகளிலும் உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகள் தீவிரம்

    தேரோட்டத்தை ஒட்டி நாளை மறுநாள் நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் தேரோட்டத்தை காண வருவார்கள் என்பதால் நான்கு ரத வீதிகளிலும் கழிப்பிட வசதி, சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

    Next Story
    ×