என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, மரங்கள் சாய்ந்தன
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, மரங்கள் சாய்ந்தன

    • மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    நாமக்கல்:

    கேரளாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதில் வீரகனூர், நங்கவள்ளி, கரியகோவில், ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    186.6 மி.மீ மழை

    மழையை தொடர்ந்து மாவட்டத்தில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோடைகாலத்தில் பெய்த இந்த மழை பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 56 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கெங்கவல்லி -30, கரிய கோவில் -26, ஏற்காடு -25, ஓமலூர் -11, பெத்தநாயக்கன்பாளையம் -10.5, சேலம் -8, தம்மம்பட்டி -7, காடையாம்பட்டி -5, சங்ககிரி 3.1, ஆத்தூர் -2, ஆனை மடுவு -2, எடப்பாடி -1 என மாவட்டம் முழுவதும் 186.6 மி.மீ மழை பதிவானது. இன்று காலை மாவட்ட முழுவதும் வெயில் அடித்தபடி இருந்தது.

    நாமக்கல்

    நாமக்கல்லில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் 1 மணி நேரமாக கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம் சாலை சந்திப்பு, குட்டை தெரு உள்பட பல இடங்களில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் குட்டை தெருவில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அவற்றை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மரங்கள் சாய்ந்தன

    வெண்ணந்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அளவாய்ப்பட்டி, நடுப்பட்டி, அத்தனூர், நாச்சிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மாலையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×