என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோடு அருகே சாலை அமைக்க கோரி ஏரிக்குள் அமர்ந்து போராட்டம்
    X

    சாலை அமைக்ககோரி ஏரிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 

    திருச்செங்கோடு அருகே சாலை அமைக்க கோரி ஏரிக்குள் அமர்ந்து போராட்டம்

    • திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் போலீஸ் நிலையம் பின்புறம் 50 ஏக்கர் பரப்பளவில் அகரம் ஏரி அமைந்துள்ளது.
    • இந்த ஏரியை சுற்றி சூரப்புலி அம்மன் கோவில் முதல் அகரம் ஏரிக்கரை பிள்ளையார் கோவில் வரை உள்ள சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் போலீஸ் நிலையம் பின்புறம் 50 ஏக்கர் பரப்பளவில் அகரம் ஏரி அமைந்துள்ளது.

    இந்த ஏரியை சுற்றி சூரப்புலி அம்மன் கோவில் முதல் அகரம் ஏரிக்கரை பிள்ளையார் கோவில் வரை உள்ள சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மண் சாலையாக இருந்து வருகிறது.

    இச்சாலையை தார்சாலையாக மாற்றம் செய்யக்கோரி, அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் பலனாக கடந்த 2018-19-ம் ஆண்டு சாலை அமைக்க ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், 5 ஆண்டுகளாகியும் இது வரை சாலை அமைக்கப்படவில்லை.

    தவிர, சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல மரங்கள் இருப்பதால் அவ்வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைக் காலங்களில் மண்சாலை சேறும் சகதியுமாக மாறுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.

    இதனால் இச்சாலையை பயன்படுத்தும் கொத்தம்பாளையம். அகரம் கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு இச்சாலையை விரைந்து தார்சாலையாக மாற்ற வலியுறுத்தி வந்தனர்.

    இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் மற்றும் பி.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் பொறுமையிழந்த கிராம மக்கள், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமையில், சி.பி.எம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி ஆகியோருடன் ஏரிக்குள் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், ஒன்றிய பொறியாளர் ஆனந்தி, கிராம நிர்வாக (பொறுப்பு) அலுவலர் சத்யராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கடிதம் அளித்தனர். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். இச்சம்பவதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×