search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை கரும்பு கடையில் போலீசாரின் அறிவிப்பால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
    X

    கோவை கரும்பு கடையில் போலீசாரின் அறிவிப்பால் தடுமாறும் வாகன ஓட்டிகள்

    • போக்குவரத்து போலீசார் ஆத்துப்பாலம் பகுதியில் சிக்னல் முறையை அப்புறப்படுத்தி ரவுண்டானா முறையை ஏற்படுத்தினர்.
    • இந்த அறிவிப்பினை ஒரு போக்குவரத்து போலீசார் எந்த நேரமும் நின்று கொண்டு அறிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

    குனியமுத்தூர்.

    கோவை உக்கடத்தில் கடந்த பல ஆண்டுகளாக மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அன்றாடம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து போலீசார் ஆத்துப்பாலம் பகுதியில் சிக்னல் முறையை அப்புறப்படுத்தி ரவுண்டானா முறையை ஏற்படுத்தினர்.

    இதனால் வாகனங்கள் நெரிசலில் இருந்து தப்பி சீராக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஆத்துப்பாலத்தை தாண்டி கரும்பு கடையில் மட்டும் வாகனங்கள் சிக்கி விடுகிறது. ஆக்கிரமிப்பு அனைத்தும் அகற்றாத காரணத்தால் குறுகிய சாலையில் அனைத்து வாகனங்களும் சிரமப்பட்டு பயணிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஏனெனில் மிகவும் குறுகலான பகுதியில் அத்தனை வாகனங்களும் ஒரே நேரத்தில் கடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

    அமலும் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் வாகனங்களை போக்குவரத்து நெரிசலில் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து போலீசார் அங்கே நின்று கொண்டு சாலையின் இடதுபுரத்தில் இருசக்கர வாகனங்களை அனுப்பி வருகின்றனர். அதுவும் மைக்கில் சத்தமாக இரு சக்கர வாகனங்கள் இடதுபுரத்தில் வாங்க என்று கூவி கூவி அழைப்பார்கள். இருசக்கர வாகனங்கள் இடது புறமாக சென்று திரும்பி வலது புறம் வரும்போது அதே சாலையை தொட்டுவிடும். இதனால் சற்று வாகன நெரிசலை தவிர்க்கலாம். இந்த அறிவிப்பினை ஒரு போக்குவரத்து போலீசார் எந்த நேரமும் நின்று கொண்டு அறிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

    இருசக்கர வாகனம் சாலையின் இடது புறமாக வாங்க...என்று மைக்கில் அறிவித்துக் கொண்டிருப்பார். ஆனால் அதே சத்தம் துரதிஷ்டவசமாக சாலையின் எதிர்முனையில் வரும் வாகனங்களும் கேட்கப்படும். உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி வரும் இருசக்கர வாகனங்கள் அதே குரலைக் கேட்கக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. ஒருவேளை அவர்கள் அந்த குரலைக் கேட்டு இடதுபுறம் திரும்பி விட்டால் கரும்பு கடை ஊருக்குள் சென்று விடும். இது மீண்டும் குழப்பத்தை உருவாக்கும்.

    எனவே மைக்கில் அறிவிப்பு செய்யும் போலீசார்கள், ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் இடதுபுறம் வாங்க என்று சரியாக கூற வேண்டும். அவ்வாறு கூறினால், சாலையின் இரு புறமும் பயணித்துக் கொண்டிருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குழப்பம் ஏற்படாது.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- இது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. ஆனால் மைக்கில் அறிவிப்பு தரும் போலீசார் ஆத்துப்பாலத்தில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் இடது புறம் வாருங்கள் என்று முறையாக கூறினால் குழப்பம் ஏற்படாது. இல்லையென்றால் எதிர்முனையில் உக்கடத்தில் இருந்து வரும் வாகனங்கள் குழப்பம் ஏற்பட்டு கரும்பு கடை ஊருக்குள் சென்று விடும். எனவே அறிவிப்பு தரும் போலீசார் சரியாக அறிவிப்பு செய்தால் யாவருக்கும் குழப்பமில்லாத சூழ்நிலை உருவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×