search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி வழியாக நெல்லை-மைசூர் சிறப்பு ரெயில்கள் இயக்க அதிக வாய்ப்பு - தெற்கு ரெயில்வே வழித்தட அனுமதி கொடுக்க பயணிகள் கோரிக்கை
    X

    தென்காசி வழியாக நெல்லை-மைசூர் சிறப்பு ரெயில்கள் இயக்க அதிக வாய்ப்பு - தெற்கு ரெயில்வே வழித்தட அனுமதி கொடுக்க பயணிகள் கோரிக்கை

    • மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
    • தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.

    தென்காசி:

    மைசூரில் இருந்து தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறை செல்லும் ரெயில்களின் பெட்டிகள் பழைய ஐ.சி.எப்.பெட்டிகளாக இயங்கி வந்த நிலையில் இன்று முதல் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிவப்பு வண்ண எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    எனவே இந்த நான்கு ெரயில்களின் பழைய ரெயில் பெட்டி தொடர்களைக் கொண்டு மைசூரில் இருந்து பெங்களூரு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை வழியாக நெல்லைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

    மைசூர்-தூத்துக்குடி-மைசூர் மற்றும் மைசூர் - மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 23 பெட்டிகளுடன், பெட்டிகள் பகிர்வு முறையில் இயங்கி வந்தன.

    இந்த இரண்டு ரெயில் பெட்டி தொடர்களின் பராமரிப்பும் மைசூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வண்டி தென்மேற்கு ரெயில்வேக்கு சொந்தமான வண்டி ஆகும்.

    தற்போது இந்த 2 ரெயில்களின் பெட்டி தொடர்கள் அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.

    எனவே இந்த இரண்டு ரெயில்களின் 4 ெரயில் பெட்டி தொடர்களில் உள்ள 92 ெரயில் பெட்டிகளில் நல்ல பெட்டிகளை தேர்ந்தெடுத்து 18 பெட்டிகளை பயன்படுத்தி நாமக்கல், மதுரை, தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்க சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.

    இது குறித்து தென் மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில், மதுரை ரெயில்வே கோட்டத்தில் மிக முக்கிய வழித்தடமான விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை. நெல்ைல வழித்தடத்தில் 3 மாவட்டங்கள் பயன்பெறும் மிக முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த வழித்தடத்தில் பெங்களூருக்கு ரெயில்கள் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

    தற்போது அதற்கான நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மைசூர் - தூத்துக்குடி, மயிலாடுதுறை ரெயில்களின் பழைய ெரயில் பெட்டிகளை பயன்படுத்தி உடனடியாக மைசூர் - நெல்லை வழி பெங்களூரு, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், தென்காசி அம்பை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். இதன் மூலம் தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு முதன்முறையாக கரூர், நாமக்கல், சேலம், பெங்களூரு, மைசூருக்கு ரெயில் இணைப்பு கிடைக்கும்.

    எனவே மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக தெற்கு ரெயில்வே மற்றும் தென்மேற்கு ரெயில்வே பொது மேலாளர்களுக்கு கடிதம் எழுதியும் நேரில் வலியுறுத்தியும் இந்த ரெயிலை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    Next Story
    ×