search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணையை 12-ந்தேதி திறந்து வைக்க முதலமைச்சர் இன்று சேலம் பயணம்
    X

    மேட்டூர் அணையை 12-ந்தேதி திறந்து வைக்க முதலமைச்சர் இன்று சேலம் பயணம்

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
    • விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.

    சேலம்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் செல்லும் அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இன்று மாலை 6 மணி அளவில் சேலம் மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம், சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கி பேசுகிறார். இதில் சேலம் மத்திய, மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இன்று இரவு சேலம் அஸ்தம்பட்டி மாளிகையில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை 9 மணிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    அதன்பிறகு கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த விழாவில் ரூ.33.60 கோடியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம் ரூ.10.58 கோடியில் மறு சீரமைக்கப்பட்ட போஸ் மைதானம், ரூ.12.34 கோடியில் ஆனந்தா பாலம் வாகன நிறுத்துமிடம், ரூ.14.97 கோடியில் வ.உ.சி மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.13.04 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், ரூ.12 கோடியில் தொங்கும் பூங்காவில் கட்டப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    மேலும் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். அதே போல புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் அவர் வழங்குகிறார்.

    நாளை மதியம் 4 மணிக்கு மேல் மேட்டூருக்கு புறப்பட்டு செல்லும் அவர், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார்.

    12-ந் தேதி காலை 10 மணிக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். 3 நாள் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், சேலத்தில் இருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.

    Next Story
    ×