search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு மாற்று இடம்: பொதுப்பணித்துறை ஏற்பாடு
    X

    மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு மாற்று இடம்: பொதுப்பணித்துறை ஏற்பாடு

    • கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது.
    • கடற்கரையில் உள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரையின்முக்கிய அடையாளமாக திகழும் காந்தி சிலை கடந்த 1959-ம் ஆண்டு தேபி பிரசாத் ராய் சவுத்ரி என்பவரால் செதுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல்-அமைச்சர் காமராஜ் முன்னிலையில் 12 அடி வெண்கல காந்தி சிலை திறந்து வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினம் அன்று கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் காந்தி சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செதுத்துவார்கள். அத்துடன் தேசபக்தி பாடல் பாடுவது, ராட்டையில் நூல் நூற்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் கடற்கரை மெட்ரோ ரெயில் நிலையம் சுரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக தற்போது காந்தி சிலை அருகில் உள்ள இடங்கள் இரும்பு வேலி போடப்பட்டு ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியின்போது காந்தி சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்க தற்காலிகமாக காந்தி சிலையை பணி முடியும் வரை வேறு இடத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

    கடற்கரையில் உள்ள காந்தி சிலை 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுரங்கம் தோண்டும் பணியின்போது சேதம் அடையாமல் இருப்பதற்காக பணி முடியும் வரை தற்காலிகமாக மாற்று இடத்தில் கொண்டு போய் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக முறையாக மாநகராட்சியிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து இந்த சிலையை பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்த உள்ளனர். இதற்கு முன்பாக முறையாக ஆய்வு செய்யப்பட்டு, மெரினா கடற்கரை பகுதியிலேயே பாதுகாப்பான இடத்தை பொதுப்பணித்துறையினர் தேடி வருகின்றனர். இடம் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டவுடன் சிலை இரவில் பாதுகாப்பாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை நிறுவப்படும்

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×