search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் டாக்டர்கள் விழிப்புணர்வு
    X

    கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் டாக்டர்கள் விழிப்புணர்வு

    • மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் டாக்டர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.
    • மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    தமிழக சிறைகளில் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாக உள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தனர். அப்போது கைதிகள் மட்டுமின்றி போலீசாருக்கும் மாரடைப்பு பற்றிய சரியான புரிதல்-விழிப்புணர்வு இல்லை என்பது தெரிய வந்தது.

    தமிழக சிறைச்சாலை களில் உள்ள கைதிகளுக்கும் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான மாரடைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது. மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாரடைப்பு சிறப்பு மருத்துவ நிபுணர் மதன்மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இருதய பிரிவு விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் கூறியதாவது:-

    மனித உடலில் இதயம் இயங்கவில்லை என்றால் மற்ற பாகங்கள் செயல்படாது. ஒரு குடும்பம் தலைவரை இழந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்ட முடியாது. போலீசாரும், டாக்டர்களும் ஒன்றுதான். ஏனென்றால் வருடத்தின் 365 நாட்களும் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் பேருக்கு உடல் பரிசோதனை நடத்தினோம். அதில் 300 பேருக்கு மாரடைப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் 50 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம். சினிமாவில் வருகிற மாதிரி மாரடைப்பு பாதிப்பு என்பது உடனடியாக வராது. இதற்கான அறிகுறிகள் ஏற்படும். அப்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம்.

    மாரடைப்பு பாதிப்பு ஏற்படுபவருக்கு உடலில் ரத்தம் செல்லாத பகுதியில் செல் அணுக்கள் படிப்படி யாக இறந்துவிடும். அதன் பிறகு அவரை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டு கொண்டு வருவது சிரமமான விஷயம். இதயத்தில் 3 தமனிகள் உண்டு. அதில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு ஆகும்.

    நடக்கும்போது நெஞ்செரிச்சல் இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறி. சிலர் அல்சர் என்று மாத்திரை சாப்பிடுகிறார்கள். அது தவறு. சிலருக்கு படி ஏறும் போது அதிகப்படியாக மூச்சு வாங்கும். இது பிரச்சினையின் அறிகுறி. அவர்கள் உடனடியாக இ.சி.ஜி. எடுத்து பார்த்தால் மாரடைப்பு பாதிப்பு வருமா? வராதா? என்பதை கண்டறிய இயலும்.

    நெஞ்சுவலி, மயக்கம், மூச்சு வாங்கல், களைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறி. சிகரெட் குடித்தால் இதய புற்றுநோய் வரும் என்று சொல்வார்கள். ஆனால் மாரடைப்பு தான் முக்கியமாக வரும். 10 ஆண்டுகள் சிகரெட் பிடித்தால் 100 சதவீதம் மாரடைப்பு வாய்ப்புண்டு. அப்பாவுக்கு குறிப்பிட்ட வயதில் மாரடைப்பு வந்தால் பையனுக்கும் வரும். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் பாதிப்பு வரும்.

    வயது முதிர்வு, உடல் குண்டு தன்மை, பதற்றம், நீரிழிவு, ரத்த கொதிப்பு ஆகியவை மாரடைப்பின் வேகத்தை அதிகரிக்கும். பெண்களுக்கு மெனோபாசுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு. 50 வயதை தாண்டிய பெண்கள் வருடாந்திர சோதனை செய்து பார்க்க வேண்டும்.

    புகை பிடிப்பதால் 4 மடங்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இ-சிகரெட் புகைத்தால் பாதிப்பு வராது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. மூளை பாதிப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் புகை பிடித்தல், மாரடைப்பு பாதிப்பு உறுதியாக வரும். அறியாத வயதில் பழகிவிட்டோம்: அறிந்த வயதில் விட்டுவிட வேண்டும். உடல்நல குறைவு என்று படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு சிகரெட் நினைப்பு வராது. உயிர் முக்கியம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    புகையிலை, மதுபானம் அருந்தும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். பீர் குடித்தால் பாதிப்பு குறைவு என்பார்கள். அப்படி அல்ல. பீர் குடித்தால் 3 ஆண்டுகளில் இதயம் வீங்கி விடும். நீரிழிவு மிகவும் கொடியது. ஆளைக் கொல்லும் வியாதி. 10 வருடத்திற்கு பிறகு தான் பாதிப்பு தெரியும். மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு உண்டு. ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பாதிப்பு தெரிகிறது. இதில் 60 சதவீதம் பேருக்கு மரண வாய்ப்பு அதிகமுண்டு. உடற்பயிற்சி செய்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மாரடைப்பு வந்தவுடன் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×