என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாம்பியன் பட்டம் பெற்ற அரியானா அணி வீராங்கனைகளுக்கு வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது.
கபடி போட்டி: அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை
- மதுரையில் ஜூனியர் பெடரேஷன் கபடி போட்டி நடந்தது.
- அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
மதுரை
உலககோப்பைக்கான இந்திய கபடி அணியை தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவிலான 6-வது ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேசம், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகர், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும் கலந்து கொண்டன.
லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2 நாட்களாக நடந்த லீக் சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் அரியானா, பீகார் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
நேற்று காலை ஆண்களுக்கான அரை இறுதி போட்டி நடந்தது. இதில் அரியானா அணி ராஜஸ்தான் அணியை 40- 37 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சண்டிகார் அணியை 60- 42 என்ற புள்ளிகளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின.
இறுதி போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 47-40 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 40-33 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரியானா மாநில ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தமிழ்நாடு அெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், உள்ளிட்ட பலர் வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர்.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் சிறப்பாக ஆடிய வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ஈரானில் நடைபெறும் உலகக்கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






