search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியல்
    X

    கிராம மக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியல்

    • திருமங்கலம் அருகே குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்து மறியல் செய்தனர்.
    • மேடுபகுதியாக இருப்பதால் தண்ணீர் குழாய்களில் பல வீடுகளுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சவுடார்பட்டி மீனாட்சிபுரம் உள்ளது. இந்த கிராமத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் மேற்குதெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.

    அந்த பகுதிக்கு பஞ்சாயத்து சார்பில் விநியோகம் செய்யப்படும் போர்வெல் தண்ணீர் சரிவர வருவதில்லை. மேடுபகுதியாக இருப்பதால் தண்ணீர் குழாய்களில் பல வீடுகளுக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் மீனாட்சிபுரத்தில் அமைக்கப்பட்ட ஒரு நபருக்கு 55 லிட்டர் தண்ணீரை வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் மிஷன் திட்டமும் இந்த கிராமத்தில் தோல்வியடைந்தது.

    இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது.

    இதே போல் தேசிய ஊரகவேலை உறுதித்திட்டத்தின் கீழ் மீனாட்சிபுரம் கிராம மக்களுக்கு சரிவர வேலை வழங்கப்படவில்லை என கிராமமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இதனை தொடர்ந்து மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் கிராம பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் சேடபட்டி யிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த ஒரு டவுன்பஸ்சை சிறைபிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த திருமங்கலம் யூனியன் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

    இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×