search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி கன்னியாகுமரியில் சீசன் நாளை தொடங்குகிறது
    X

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் களைக் கட்ட தொடங்கியுள்ளதை படத்தில் காணலாம்.

    சபரிமலை அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி கன்னியாகுமரியில் சீசன் நாளை தொடங்குகிறது

    • ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது
    • 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய3மாதங்களும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

    இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கும். இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. சீசனையொட்டி கன்னியாகுமரியில் இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    துப்புரவு பணியாளர்கள் சுழற்சி முறையில் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள். ஆண்டுதோறும் சபரிமலை சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடைபாதைகளில் 600-க்கும் மேற்பட்ட சீசன் கடைகள் பேரூராட்சி நிர்வாகம் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் தற்போது கன்னியாகுமரியில் சீசன் கடைகள் அமைப்பது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் இதுவரை கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சீசன் கடைகளை ஏலம் விடவில்லை. சீசனையொட்டி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் சிப்ட் முறையில் பாதுகாப்புபணியில் ஈடுபடுவார்கள். மேலும் கடற்கரை பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் வசதி செய்யப்பட்ட உள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு தனி பார்க்கிங் வசதி ஏற்பாடும் செய்யப்பட உள்ளது. சீசனையொட்டி சுற்றுலா பயணிகளை வரவேற்க கன்னியாகுமரி நகரம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×