என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பரிதாப சாவு
- மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடுகிறார்கள்
- தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடக்கிறது
கன்னியாகுமரி:
தக்கலை அருகே முளகுமூடு, மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் டக்ளஸ் (வயது 55). கூலி தொழிலாளி.
டக்ளசின் மனைவி வனஜா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு டக்ளஸ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு பொருள் வாங்க முளகுமூட்டுக்கு சென்றார். அப்போது முப்பதாங்கல் மெயின் ரோட்டில் வரும் போது எதிரே வந்த வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட டக்ளசை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இது சம்மந்தமாக மனைவி வனஜா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் உடலை கைப்பற்றி தக்கலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் டக்ளஸ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் ஏது என அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.






