133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு பொங்கல் முதல் படகு போக்குவரத்து

கன்னியாகுமரிகடல் நடுவில் அமைந்துள்ளது சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133அடி உயர திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து. சாரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133அடி உயர திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்து. சாரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.
Published on

கன்னியாகுமரி:

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர வானுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000 -ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.

கடல் நடுவில் இந்த திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் இந்த சிலை அடிக்கடி உப்பு காற்றினால் சேதம் அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டு களுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த பணி நிறைவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு வருகிற பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com